9 ஆண்டு.. பெயரின்றி வளர்ந்த சிறுமி.. தெலுங்கானா முதல்வர் கேசிஆருக்காக காத்திருந்த தம்பதி! நெகிழ்ச்சி
ஐதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரராவ் தான் பெயர் சூட்ட வேண்டும் எனக்கூறி பிறந்த மகளுக்கு 9 ஆண்டுகளாக பெயர் சூட்டாமல் தம்பதி காத்திருந்தனர். இதுபற்றி அறிந்த சந்திரசேகரராவ் தற்போது 9 வயது சிறுமிக்கு பெயர் சூட்டி கல்வி செலவை ஏற்றுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பூமியில் குழந்தையாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களின் பெற்றோர் அல்லது குடும்பத்தினர் பெயரிடுவார்கள்.
இந்த பெயர் தான் அந்த குழந்தையின் இறுதிக்காலம் வரை அவரது அடையாளமாக இருக்கும்.
இதனால் ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்கு பெயர் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சில பெற்றோர் தங்களின் முன்னோர்களின் நினைவாகவும், தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகளின் பெயர்களையும் குழந்தைகளுக்கு சூட்டி வருகின்றனர்.

பெயர் சூட்டும் அரசியல் தலைவர்கள்
மேலும் பல குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரே பெயர் சூட்டும் நிலையில் சில குழந்தைகளின் பெற்றோர் தங்களின் விருப்பத்திற்குரிய அரசியல்கட்சி தலைவர்கள் மூலம் பெயர் வைக்க விரும்புகின்றனர். அதன்படி பல நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் குழந்தைகளுக்கு பெயரிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தெலுங்கானா மாநிலத்தில் 9 ஆண்டுக்கு பிறகு அம்மாநில முதல்வர் சந்திர சேகரராவ் சிறுமி ஒருவருக்கு பெயர் சூட்டியுள்ளார். அதன் விபரம் வருமாறு:

புதிய மாநில போராட்டம்
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திர சேகரராவ் உள்ளார். ஆந்திரா மாநிலத்துடன்இருந்த தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் சந்திர சேகரராவ் பல போராட்டங்களை முன்னெடுத்தார். இதன் பலனாக தெலுங்கானா மாநிலம் 2014ல் புதிதாக உருவாக்கப்பட்டது. முன்னதாக தெலுங்கானா மாநிலம் உருவாவதற்காக சந்திரசேகரராவ் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

2013ல் பிறந்த குழந்தை
இந்த போராட்டத்தில் பூபால்பள்ளி மாவட்டத்தின் நான்டிகாமா கிராமத்தை சேர்ந்த சுரேஷ்-அனிதா தம்பதி பங்கேற்றனர். இந்த தம்பதி சந்திர சேகரராவின் தீவிர பற்றாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் இந்த தம்பதிக்கு 2013ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சந்திர சேகரராவ் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று சுரேஷ்-அனிதா தம்பதி விரும்பினர். ஆனால் இது கடந்த 9 ஆண்டுகளாக நிறைவேறவில்லை.

பெயர் சூட்டு விழா இல்லை
இதனால் அந்த தம்பதி தங்களின் மகளுக்கு பெயர் சூட்டுவிழா நடத்தவில்லை. அதேநேரத்தில் மகளை செல்லமாக அந்த தம்பதி ‛சிட்டி' என அழைத்தனர். இந்த பெயரிலேயே பள்ளியில் அவரை சேர்த்தனர். மேலும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களில் அந்த பெயர் தான் உள்ளது. தற்போது 9 வயது நிரம்பிய அந்த சிறுமி 5ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சந்திர சேகரராவ் தான் தங்கள் மகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன

பெயர் சூட்டிய முதல்வர்
இந்நிலையில் தான் இந்த சம்பவம் குறித்து சந்திரசேகரராவ் கட்சியின் எம்எல்சியான மதுசுதனாசாரி அறிந்தார். இதையடுத்து அவர் சுரேஷ்-அனிதா தம்பதியை தெலுங்கானா முதல்வரின் அலுவலக இல்லமான பிரகதி பவனுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சுரேஷ் -அனிதா தம்பதிக்கு முதல்வர் சந்திரசேகரராவ் பெயர் சூட்டினார். மகாதி என சிறுமிக்கு சந்திரசேகரராவ் பெயர் சூட்டினார்.

கல்வி செலவு ஏற்பு
இந்த வேளையில் சந்திரசேகர ராவுடன் அவரது மனைவி சோபா இருந்தார். மேலும் சிறுமிக்கு அவர்கள் பரிசு வழங்கியதோடு, மகாதியின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்தனர். இதன்மூலம் அந்த தம்பதியின் கனவு 9 ஆண்டுகளுக்கு பிறகு நனவாகி உள்ளது. மேலும் அந்த தம்பதி தங்களின் மகளுடன் முதல்வர் சந்திரசேகரராவ், அவரது மனைவி சோபா ஆகியோருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications