அம்பேத்கர் பெயர் வைக்க எதிர்ப்பு.. பற்றி எரியும் ஆந்திர மாவட்டம்.. அமைச்சர் காருக்கு தீ வைப்பு!
ஹைதராபாத்: ஆந்திராவில் மாவட்டம் ஒன்றுக்கு அம்பேத்கர் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இங்கு அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது.
அண்ணா பல்கலை.யில் 6 பேருக்கு கொரோனா! எப்படி வந்ததுனு தெரியுமா? வெளிவந்த பரபர தகவல்..!
அதில் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த 11 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா உட்பட 14 பேர் புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்றனர்.
புதிய மாவட்டம்
இதனிடையே கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து புதிதாக கோணசீமா என்ற மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா என்று பெயரிடத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த வாரம் அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இதற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மக்களிடம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
திடீர் வன்முறை
புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்கப் பொதுமக்களிடையே எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் அமலாபுரம் என்ற நகரில் இன்று திடீரென வன்முறை ஏற்பட்டது. கோணசீமா சாதனா சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு
இந்த வன்முறைச் சம்பவத்தில் ஆந்திரா பிரதேசத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் பினிபே விஸ்வரூபு வீட்டிற்கும் தீ வைத்தனர். போலீஸ் வாகனம், கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தியதில் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.
கற்கள் வீசி தாக்குதல்
இதையடுத்து வன்முறையைக் கட்டுப்படுத்த வேறுவழியின்றி போலீசார் தடியடி நடத்தினர். அப்போதும் கூட போராட்டக்காரர்கள் போலீசாருடன் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் காயம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
144 தடை உத்தரவு
இந்தச் சம்பவம் அம்மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பேத்கர் பெயர் வைக்க எழுந்த எதிர்ப்பு காரணமாகக் கடந்த வாரம் தான் கோணசீமா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதையும் தாண்டி இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
பலர் காயம்
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து கோனசீமா மாவட்ட கண்காணிப்பாளர் சுப்பா ரெட்டி கூறுகையில், "இந்த வன்முறையில் போலீசார் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். சரியாக எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை. மாவட்டத்தின் பெயரை மாற்றும் விவகாரம் குறித்த பல்வேறு பிரிவு மக்களால் தொடங்கப்பட்ட ஆன்லைன் பிரசாரம் காரணமாகவே இந்த வன்முறை நடந்துள்ளது" என்றார்.