சொன்னோம்ல..நபிகளை இழிவுபடுத்திய தெலுங்கானா ராஜாசிங்-கட்சியில் சேர்த்து வேட்பாளராகவும் அறிவித்த பாஜக!
ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜா சிங் எம்.எல்.ஏ. மீதான நடவடிக்கையை ரத்து செய்வதாக பாஜக அறிவித்துள்ளது. அத்துடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் மீண்டும் கோஷாமஹால் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளராகவும் ராஜா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் தொடர்ச்சியாக வெறுப்பு பேச்சு சர்ச்சைகளில் சிக்கியவர் ராஜா சிங் எம்.எல்.ஏ. அத்துடன் நபிகள் நாயகம் குறித்து பேசியதால் ராஜா சிங்குக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அப்போது ராஜா சிங் கைது செய்யப்பட்டார். இருப்பினும் உடனே ஜாமீனில் விடுதலையானார். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், பாஜகவும் ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தது.

தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ராஜாசிங் போட்டியிட்டு வென்ற கோஷா மஹால் தொகுதியில் விக்ரம் கவுட், பாஜக வேட்பாளராக களமிறங்க மும்முரமாக முயற்சிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இதனால் கொந்தளித்து போன ராஜாசிங், பிஆர்எஸ் கட்சியில் சேரக் கூடும் அல்லது தேர்தல் அரசியலைவிட்டே விலகக் கூடும் எனவும் கூறப்பட்டது.
மேலும் ஏற்கனவே நுபுர் சர்மா, ஜிண்டால் போன்றவர்கள் நபிகள் நாயகம் சர்ச்சைகளில் சிக்கியவர்கள்; அவர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு கட்சியில் சேர்க்கப்பட்டனர். அதேபோல ராஜா சிங்கையும் மீண்டும் பாஜகவில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன.

இந்நிலையில் தற்போது ராஜா சிங் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிடுவதாக பாஜக மேலிடம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான 53 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. இந்த பட்டியலில் ராஜா சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. கோஷாமஹால் தொகுதியிலேயே ராஜா சிங் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications