விரைவில் தேசிய கட்சி.. பணிகள் நடைபெற்று வருகிறது.. பிரதமர் வேட்பாளர்களில் முந்தும் சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜனதாவுக்கு மாற்றாக விரைவில் தேசிய அளவில் கட்சி தொடங்க இருப்பதாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இப்போதே எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. 2014- ஆம் ஆண்டு முதல் பாஜக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.
இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்க்கட்சிகள் இப்போதே வேலையை தொடங்கி விட்டன.

பாஜகவுக்கு மாற்றாக
பாஜகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு பக்கம் முனைப்பு காட்டி வருகிறார். அதேபோல், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் இதே திட்டத்துடன் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிதிஷ் குமாரையும் சந்திர சேகர் ராவ் சந்தித்து பேசினர்.

3-வது அணி சாத்தியம் இல்லை
இந்த சந்திப்பின் போது நடப்பு அரசியல் விவகாரம் வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இன்னொரு பக்கம் நிதிஷ் குமாரும் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் என அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். ஆனால், எதிர்க்கட்சிகளின் தகுதியான பிரதமர் வேட்பாளர் இல்லை என்றும், அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாது? என்றும் விமர்சிக்கும் பாஜக, 3-வது அணி நிச்சயம் சாத்தியம் இல்லாதது என்று கூறி வருகிறது.

சந்திர சேகர் ராவ்
தற்போது ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு இருப்பதும் அக்கட்சி தொய்வில் இருந்து மீண்டும் புத்துணர்ச்சியை எட்ட உதவும் என்று காங்கிரஸ் நம்புகிறது. இதனால், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. இதனிடையே, தேசிய அரசியலில் ஆர்வம் காட்டி வரும் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் விரைவில் தேசிய அளவில் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் பரவி வந்தன.

தேசிய கட்சி தொடங்குகிறார்
இந்த நிலையில், இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், விரைவில் தேசிய கட்சியை தொடங்க இருப்பதாக சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. விரைவில் தேசிய கட்சி உருவாக்குவதும் அதற்கான கொள்கைகளை வகுப்பதும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications