நம்ம "கிங்” கோலியா இது? என்ன பொறுமை.. ஆளே மாறிட்டாரே! ஆக்கிரோஷம் டூ அமைதி - ரசிகர்களான ஹேட்டர்கள்
ஐதராபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் இந்தியா வென்று கோப்பையை தட்டிச்சென்ற நிலையில் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் பலரையும் வியக்க செய்து இருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா அடுத்தடுத்த ஆட்டமிழக்க விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் சூர்ய குமார் யாதவ்.
பழைய ரணங்கள் மறக்குதே! ஸ்கையின் “வானவேடிக்கை”.. முதுகெலும்பாக கோலி -“மோதலுக்கு” பின் மீண்டும் சரவெடி
கோலி - சூர்யா ஜோடி
விராட் கோலி விக்கெட்டுகள் விழுவதை கட்டுப்படுத்தி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடினார். இதற்கு ஃபார்ட்னராகவும் ஒரு சீனியர் வீரராகவும் தேவையான ஒத்துழைப்பை கோலி வழங்கி நம்பிக்கை அளித்தார். தனக்கு வந்த பந்துக்களை வீணடிக்காமல் சூர்ய குமார் யாதவுக்கு ஸ்ட்ரைக்கை மாற்றிவிட்டுக் கொண்டிருந்தார் விராட் கோலி.
வெற்றிக்கு வித்திட்ட கோலி
இதனால் சூர்யகுமார் யாதவ் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசி அசத்த மறுமுனையில் இருந்த விராட் கோலி சற்று தாமதமாக அரை சதத்தை கடந்தார். சூர்யகுமார் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவை ஆடவிட்டு பொறுமையாக அரைசதம் கடந்தார் கோலி. கடைசி ஓவரில் அதிக ரன்கள் தேவைப்பட்ட அசத்தலான சிக்சரை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.
ஆக்கிரோஷ கோலி
விராட் கோலி இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்தே
மைதானத்தில் ஆக்கிரோஷமாக நடந்துகொள்பவர். இதற்காகவே பல்வேறு விமர்சனங்களை அவர் சந்தித்து இருக்கிறார். ஆனாலும், கேப்டனாக பொறுப்பேற்ற பின் சற்று ஆக்கிரோஷத்தை குறைத்துக் கொண்டார். இருந்தாலும் அவ்வப்போவது ஆக்கிரோஷமும் அவசரமும் அவரது ஆட்டத்தில் வெளிப்பட்டே வந்தது.
ஃபார்ம் அவுட்
ஆனால், கடந்த ஆண்டு ஃபார்ம் அவுட் என்ற விமர்சனம் எழுந்த பின் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கோலியை அணியிலிருந்தே நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தான் மன அழுத்தத்தில் இருப்பதை வெளிப்படையாகவே தெரிவித்தார் கோலி. ஆனால், ஆசிய கோப்பையில் தனது ஃபார்மை மீண்டும் நிரூபித்த கோலி அசத்தலான சதத்தை விளாசி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அமைதியான கோலி
ஆசிய கோப்பையில் இருந்தே கோலியிடம் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அவரிடம் பழைய ஆக்கிரோஷமும் அவசரமும் இல்லை. அமைதியும் நிதானமும் தெரிகிறது. இதுதான் அவரை தற்போது நிலையான ஆட்டத்தை ஆட வைத்திருக்கிறது. அவரது ஆக்கிரோஷத்தால் கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் கூட அவரை தற்போது பாராட்டத் தொடங்கி இருக்கிறார்.