எனக்கு அப்பா மாதிரி.. நான் செஞ்சதுல என்ன தப்பு.. பெரிசுப்படுத்தாதீங்க.. தெலுங்கானா ஆட்சியர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் மாவட்ட ஆட்சியர் ஒருவர் அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் காலில் விழுந்து வழங்கினார். இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் முதல்வர் தனக்கு தந்தையை போன்றவர் என்றும் அதனால் அவரிடம் ஆசி பெற்றேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பரஸ்பரம் பலர் தந்தைக்கு வாழ்த்துகளை கூறினர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டையில் புதிய ஆட்சியரக அலுவலகம் திறக்கப்பட்டது. இதை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர்
அப்போது அந்த மாவட்டத்தின் ஆட்சியர் வெங்கட்ராமா ரெட்டி முதல்வரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் முதல்வரை கண்டித்தன. இதையடுத்து தான் ஏன் முதல்வர் காலில் விழுந்தேன் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
தந்தை
இதுகுறித்து அவர் கூறுகையில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்னர் எனது தந்தையை போன்றுள்ள முதல்வரின் ஆசிர்வாதங்களை பெற்றேன். இதில் சர்ச்சைக்குரிய வகையில் ஏதும் இல்லை. அதிலும் நான் காலில் விழுந்த தினம் தந்தையர் தினம், மிகவும் பொருத்தமான நாள் என்றார்.
கைப்பாவை
இதுகுறித்து அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷ்ரவன் தசோஜூ கூறுகையில் "ஐஏஎஸ் அதிகாரிகளை அடிமைகளாகவும், கைப்பாவைகளாகவும் மாநில அரசு பாவிக்கிறது. அலுவலகத் திறப்பு விழாவில் ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ராமா ரெட்டி முதல்வரின் காலில் விழுந்திருக்கக் கூடாது.
என்ன சொல்ல வருகிறீர்கள்?
தெலுங்கானாவில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தாங்கள் அரசியலமைப்பின் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். முதல்வர் உங்களுக்கு (ஆட்சியருக்கு) தந்தை போன்றவர் என்றால் நீங்கள் அவரது வீட்டிற்கு சென்று காலில் விழுந்திருக்க வேண்டும். ஒரு அரசு விழாவில் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. இதன் மூலம் பொதுமக்களுக்கு எந்த கருத்தை சொல்ல வருகிறீர்கள்" என கேள்வி எழுப்பியுள்ளார்.