“நிர்மலா ஜி.. நீங்க ஆசைப்பட்டீங்கன்னா அதையும் செய்றோம்”.. ‘மோடி படம்’ சர்ச்சை.. கேசிஆர் மகள் பதிலடி!
ஹைதராபாத் : பிரதமர் மோடி புகைப்பட விவகாரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெலுங்கானா எம்.எல்.சியும், அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு நடத்தினார்.
அப்போது ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்படாததை கண்டு அந்த மாவட்ட ஆட்சியரை நிர்மலா சீதாராமன் கண்டித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியினர் சில கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்தனர்.

ரேஷன் கடையில் ஆய்வு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடையில் சமீபத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கம்மாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்த பேனரில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், நிர்மலா சீதாராமன் கேட்டார். மேலும் அவர் கேட்ட பல கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெரியவில்லை என்று பதில் கூறினார்.

டென்ஷனான நிர்மலா சீதாராமன்
இதனால் கோபமடைந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு சார்பில் மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் ரேஷன் அரிசி, வெளியில் ஒரு கிலோ சுமார் ரூ. 35 வரை விலை இருக்கும். இதனை மக்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வாங்கி கொள்கின்றனர். மாநில அரசு ரூ.3.30 ஒரு கிலோவுக்கு செலவு செய்கிறது. மீதமுள்ள ரூ.30.70 காசுகள் மத்திய அரசு செலவு செய்கிறது. போக்குவரத்து செலவை கூட மத்திய அரசே ஏற்கிறது.

நானே வைப்பேன்
ஆனால், தெலுங்கானாவில் இந்த அரிசியை மாநில அரசே மக்களுக்கு வழங்குவதாக கூறிக் கொள்கிறது. மத்திய அரசு அரிசியை இலவசமாக வழங்கியது. ஆனால், மாவட்ட கலெக்டருக்கு ஒன்றுமே தெரியவில்லை. மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் வைப்பேன்" எனக் கோபமாகப் பேசினார்.

சிலிண்டர்களில் மோடி படம்
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியினர் சில கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்தனர். கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டும் வகையில், கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி டிஆர்.எஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கேசிஆர் மகள் பதிலடி
இந்நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு தெலுங்கானா எம்.எல்.சியும், அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா பதிலடி கொடுத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கானா அரசின் ஆசரா திட்ட ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.கவிதா, "நிதி அமைச்சர் தெலுங்கானாவுக்கு வந்தது நல்லது. விருந்தினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் ரேஷன் கடைக்கு சென்று பிரதமரின் படம் போடாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சண்டை போட்டார்.

நிர்மலா ஜி
பிரதமரின் படங்கள் ரேஷன் கடைகளுக்கு வெளியே வைக்கப்படுவது வழக்கம் இல்லை. நேரு காலத்திலோ, மன்மோகன் சிங்காலத்திலோ அல்லது வாஜ்பாய் காலத்திலோ கூட யாருடைய படங்களையும் வைத்ததில்லை. நிர்மலாஜி, நீங்கள் பிரதமரின் படங்களை வைக்க விரும்பினால் நாங்கள் அதை நிச்சயம் செய்வோம்.

யூரியா பாக்கெட்டுகளில்
பாஜக ஆட்சியில் விலை அதிகரித்த பொருட்களில் எங்கள் கட்சி, பிரதமர் மோடியின் படங்களை வைக்கும். கேஸ் சிலிண்டர்கள், யூரியா பாக்கெட்டுகள், பெட்ரோல், டீசல் நிலையங்கள், எண்ணெய் மற்றும் பருப்பு பாக்கெட்டுகளில் வைப்போம். எங்கெல்லாம் விலை அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் பிரதமர் மோடியின் படங்களை வைப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications