நீங்க கொடுத்தது இவ்வளவுதான்.. பாதிக்கு பாதி நாங்கதான்.. நிர்மலாவிற்கு பாடம் எடுக்கும் கேடிஆர்
ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள ரேசன் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரேசன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் இடம் பெறச்செய்யவில்லை என்று கேள்வியெழுப்பியிருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேபோல, ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியில் மத்திய மாநில அரசுகளின் பங்கு என்ன என்பது குறித்தும் நிதியமைச்சர் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற இந்த ஒரே சம்பவத்தின் இரண்டு கூறுகளும் அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகின.
ஆணவம்.. நீங்க தர்மம் செய்யலியே.. ரேஷனில் மோடி படம் எதுக்கு? நிர்மலா சீதாராமனை விளாசிய பிரகாஷ் ராஜ்
ரேசன் கடை
இந்நிலையில் நிதியமைச்சரின் நடவடிக்கை குறித்து தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமா ராவ் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக தெலங்கானா மாநிலத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், ஜஹீராபாத் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது உடன் காமரெட்டி மாவட்டத்தின் ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது நிர்மலா சீதாராமன், ரேசன் கடைகளில் வழங்கும் அரிசியில் மத்திய மாநில அரசுகளின் பங்குள் என்ன என ஆட்சியரிடம் கேள்வியெழுப்பினார்.
ஆய்வு
ஆனால் விடை தெரியாமல் ஆட்சியர் முழிக்கவே, அரை மணி நேரத்தில் இதற்கான விடையை தெரிந்துகொண்டு வாருங்கள் என கூறியுள்ளார். இதன் பின்னர் இந்த விவரங்களை நிதியமைச்சரே விரிவாக கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் வழங்கும் அரசி, கோதுமை போன்றவற்றுக்கான நிதியில் பெரும் பங்கு மத்திய அரசு வழங்குகிறது. வெளி சந்தையில் ரூ.35க்கு கிடைக்கும் அரிசி, ரேஷன் கடைகளில் ரூ.1க்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் வழங்கும் அரசிக்காக மத்திய அரசு ரூ.30 பங்களிப்பு வழங்குகிறது.
விளக்கம்
மாநில அரசோ ரூ.4 வழங்குகிறது. பயனாளர்களிடம் ஒரு ரூபாய் மட்டும் தான் வசூலிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று வந்த பின் 2020ஆம் ஆண்டு முதல் இலவச அரசி கோதுமையை மத்திய அரசே இலவசமாக வழங்கி வருகிறது" என விரிவாக கூறினார். பின்னர் ரேசன் கடைகளில் பிரதமர் மோடியின் படங்களை ஏன் வைக்கவில்லை என்று கேள்வியெழுப்பிய நிதியமைச்சர், பாஜகவினர் அவ்வாறு படங்களை வைக்க வந்தால் அதை அகற்றக்கூடாது என்றும், ரேசன் கடைகளில் பிரதமரின் படம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
பதில்
இந்நிலையில் நிதியமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது அதனைத் தொடர்ந்து, அமைச்சர் கே.டி.ராமா ராவ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில், "தேசத்திற்கு தெலுங்கானா பங்களிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 46 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. எனவே, அனைத்து பாஜக ஆளும்P மாநிலங்களிலும் ரேசன் கடைகளில் "தெலுங்கானாவுக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்க வேண்டிய நேரம் இது" என குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கு பாதி
முன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அம்மாநில அமைச்சர் ஹரிஷ் ராவ், "தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 50 முதல் 55 சதவீத கார்டுதாரர்களுக்கு மட்டுமே மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசியை ஒரு கிலோ ரூ.3 வீதம் மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள 45-50 சதவீத மக்களுக்கு தெலங்கானா அரசு வழங்கி வருகிறது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.டி.ராமா ராவ் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் 2015-2021 வரை தெலங்கானா அரசு 3,65,797 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வரியாக செலுத்தியுள்ளது. ஆனால் கிடைக்கப்பெற்றதோ வெறும் ரூ.1,68,647 கோடி மட்டும்தான்.