இத்தனை கேமராவா.. ஆம்புலன்சுக்கு வழிவிட்ட மோடி! இது “ஷூட்டிங்”தான் - அடித்து சொன்ன டிஆர்எஸ் பிரமுகர்
ஐதராபாத்: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டதாக வீடியோ பகிரப்பட்டு வரும் நிலையில், இது படப்பிடிப்பு என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி பிரமுகர் சதீஷ் ரெட்டி விமர்சித்து இருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இமாச்சல பிரதேசத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சூறாவளி பிரச்சாரம்
ஆளும் பாரதிய ஜனதா மற்றும் கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிகள் இடையே இமாச்சல பிரதேசத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியும் இங்கு தேர்தலில் போட்டியிடுகிறது. 3 நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் பாஜக தலைவர்கள் அங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இமாச்சலில் மோடி
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் எப்படியாவது ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்போடு பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்துக்கு சென்று இருக்கிறார்.

காரில் சென்ற மோடி
இன்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சுஜான்பூர், சம்பியில் நடைபெறும் பாஜக பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு சாலையின் இருபுறமும் பாஜக தொண்டர்கள் வரிசையாக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆம்புலன்ஸ்
அங்குள்ள மலைப்பாதையில் பிரதமர் மோடியின் கான்வாய் சென்று கொண்டு இருந்தபோது அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. உடனே ஆம்புலன்ஸ் செல்வதற்காக பிரதமரின் காரும் அதன் பின்னால் வந்த பாதுகாப்பு வாகனங்களும் ஒரு சேர நிறுத்தப்பட்டன. இதனால் தடையின்றி ஆம்புலன்ஸ் அவ்வழியாக கடந்து சென்றது.

பகிரப்படும் வீடியோ
பல கோணங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ மற்றும் செய்திகளை பகிர்ந்து பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி வருகின்றனர். மறுபக்கம் இது படப்பிடிப்பு என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்திட்டு வருகிறார்கள்.

டிஆர்எஸ் நிர்வாகி
தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு ஒருங்கிணைப்பாளரான சதீஷ் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஆம்புலன்சுக்கு வழிவிட்டது படப்பிடிப்பு என்று விமர்சித்து இருக்கிறார். சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவை வெளியிட்டு தனது குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை அவர் அளித்து உள்ளார்.

ஷூட்டிங்
அதில், "பிரதமரின் கான்வாயை கடந்து செல்லும் ஆம்புலன்ஸை பல கோணங்களில் வீடியோ பதிவு செய்ய ஒளிப்பதிவாளர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மோடியின் கார் கண்ணாடியில் ஆம்புலஸ் கடந்து செல்வது தெளிவாக தெரியும் வகையில் வீடியோ பதிவு செய்வதற்கு ஏற்ப கான்வாய் சரி செய்யப்பட்டு உள்ளது." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications