ஆமா! உண்மைதாங்க.. மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட விமானம்.. பரவும் வீடியோ! கடைசியில் ட்விஸ்ட்!
ஹைதராபாத்: ஆந்திராவில் மேம்பாலத்திற்கு அடியில் விமானம் ஒன்று சிக்கிக்கொண்டதால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைகளில் போக்குவரத்து வசதிக்காக கட்டப்படும் மேம்பாலங்களுக்கு அடியில் அவ்வப்போது கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் செய்திகளை அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம்.
சென்னையில் கூட சில நேரங்களில் ஆம்னி பேருந்துகள் சிக்கிக் கொண்ட செய்திகள் வெளி வந்து இருக்கின்றன.
ஆந்திராவில் சம்பவம்
அதிக உயரத்துடன் பாரங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் இப்படி பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொள்வதும் பிறகு அதை மீட்புக்குழுவினர் மீட்பதும் வாடிக்கையான ஒன்றுதான். இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், விமானம் ஒன்று பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது உண்மைதான். அதுவும் வேறு எங்கும் கிடையாது. நமது அண்டை மாநிலமான ஆந்திராவில்தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது.
மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய விமானம்
ஆந்திராவின் பாபடலா மாவட்டத்தில் உள்ள கோரிசபாடு மேம்பாலத்திற்கு கீழ்தான் விமானம் சிக்கிக் கொண்டு இருக்கிறது. விமானம் சிக்கிக் கொண்டதாக சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவியதால் அங்கு வேடிக்கை பார்க்க பலரும் கூடினர். பலரும் செல்பி எடுத்துக்கொண்டதையும் காண முடிந்தது. பயன்பாட்டுக்கு உதவாத விமானத்தை டிரக்கில் கொண்டு வரப்பட்ட போது விமானம் இப்படி சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது.
ஓட்டலுக்காக பழைய விமானம்
இது குறித்த முழு விவரம் வருமாறு: ஆந்திராவில் பிஸ்தா ஹவுஸ் என்ற ஓட்டல் நிறுவனம் பழைய விமானத்தை ஓட்டலாக மாற்றி வாடிக்கையாளர்களை கவர முடிவு செய்துள்ளது.
இதற்காக கேரளாவில் பழைய விமானம் ஒன்றை வாங்கி ஓட்டல் அமைக்க திட்டமிட்டு இருந்தது. பின்னர் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சாலைமார்க்கமாக அந்த விமானத்தை டிரக்கில் ஏற்றி ஐதராபாத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலையில் விமானத்தை பார்த்ததால் செல்பி
அதன்படி, நீண்ட டிரக்கில் வைத்து கொச்சியில் இருந்து அந்த பழைய விமானம் ஐதாரபத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டது. கொச்சியில் இருந்து இந்த விமானம் கொண்டு வரப்பட்ட வழியிலேயே வாகன ஓட்டிகள் பலரும் விமானத்தை சாலையில் பார்த்த உற்சாகத்தில் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போதே இது தொடர்பான பதிவுகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வந்தன.
எதிர்பாராத விதமாக பாலத்திற்கு அடியில்
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஆந்திர மாநிலம் மேதரமெட்லா அருகே கோரிசேபாடு மேம்பாலம் வழியாக செல்லும் சாலையில் விமானத்தை ஏற்றிக்கொண்டு வந்த டிரக் செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டது. மேற்கொண்டு டிரக்கை நகர்த்தினால் சேதம் அடையும் என்பதால் டிரைவரும் அப்படியே டிரக்கை நிறுத்திக் கொண்டார்.
இணையத்தில் பரவும் வீடியோ
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட நேரத்துக்கு பின்னரே அந்த டிரக்குடன் அந்த விமானம் மீட்கப்பட்டது. சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு டிரக் டிரைவர்கள் லாவமாக பாலத்தில் இருந்து விமானத்தை மீட்டு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் விமானம் சேதம் எதுவும் இன்றி மீட்கப்பட்டது. முன்னதாக சாலையில் விமானத்தை பார்த்த பலரும் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.