கலெக்டர் கூட வரவில்லை.. கவர்னர் தமிழிசையை புறக்கணித்த அதிகாரிகள்.. தெலுங்கானாவில் பெரும் மோதல்
ஐதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. இதுபற்றி தமிழிசை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகாரளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ஆளுநர் தமிழிசையை வரவேற்க வராமல் கலெக்டர், எஸ்பி புறக்கணித்துள்ளனர். இதன்மூலம் மோதல் போக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இங்கு தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார். இவர் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் சந்திரசேகரராவ், ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடும், மோதல் போக்கும் உள்ளதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

முதல்வர் - ஆளுநர் மோதல்
அதன்படி தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எப்போதும் ஆளுநர் உரையுடன் துவங்கும் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரை இன்றி துவங்கியது. இதேபோல் யாதாத்ரி கோவில் திறப்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் புறக்கணிக்கப்பட்டார். உகாதி தினத்தில் ராஜ்பவனில் (கவர்னர் மாளிகை)நடந்த பஞ்சாங்க ஸ்ரவணம் நிகழ்ச்சியை சந்திரசேகரராவ் புறக்கணித்தார்.

மோடியை சந்தித்த தமிழிசை
மேலும் முழுகு மாவட்டம் சம்மக சரலாம்மா ஜாத்ரேவுக்கு தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்க அரசு அதிகாரிகள் செல்லவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்த நிலையில் தமிழிசை சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் சந்திரசேகரராவ் குறித்து புகார் அளித்துள்ளார். தெலங்கானா மாநில அரசால் தான் புறக்கணிக்கப்படுவது குறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்து கூறியுள்ளார். மேலும் தெலங்கானா, புதுச்சேரி அரசியல் நிலவரங்கள் பற்றியும் அவர்கள் பேசியுள்ளனர்.

மீண்டும் புறக்கணிப்பு
தமிழிசையின் இத்தகைய செயல்பாடு தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மீண்டும் தமிழிசை சவுந்தர்ராஜனை, தெலுங்கானா அரசு புறக்கணித்துள்ளது. அதாவது நேற்று பத்ராசலம் ரெயில் நிலையம் சென்ற தமிழிசையை அம்மாவட்ட கலெக்டர் அனுதீப், போலீஸ் சூப்பிரண்டு(எஸ்பி) சுனில் தத் ஆகியோர் வரவேற்கவில்லை. மாறாக கூடுதல் துணை கலெக்டர் வெங்கடேஷ்வர்லு, ஆர்டிஓ கொத்தகுடேம் ஆகியோர் வரவேற்றனர். மாவட்டத்துக்கு ஆளுநர் சென்றால் அவரை கலெக்டர், எஸ்பி ஆகியோர் வரவேற்க வேண்டும் என்பது புரோட்டோகால் என கூறும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழிசையிடம் கேள்வி
இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் பத்ராசலம் ராமன் கோவிலில் தரிசனம் செய்தார். சுவாமிக்கு பட்டு வழங்கி வழிபாடு செய்தார். அங்கு அவரை கோயில் இஓ சிவாஜி, ஏஎஸ்பி ரோகித் ராஜூ ஆகியோர் வரவேற்றனர். தரிசனத்துக்க பின்பு கலெக்டர், எஸ்பி வரவேற்பு அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛நான் தரிசனத்துக்காக தான் கோவிலுக்கு வந்தேன். அதிகாரிகளின் வரவேற்புக்காக வரவில்லை. நான் மகிழ்ச்சியாக தரிசனம் செய்து கடவுளிடம் ஆசி பெற்றுள்ளேன். தெலங்கானா உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்க வேண்டும் என வேண்டி கொண்டேன்.'' என்றார்.

விடுப்பில் சென்றனரா?
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தமிழிசை சந்தித்து திரும்பிய நிலையில் அவரை மாவட்ட உயரதிகாரிகள் வரவேற்காததற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாநில அரசின் அறிவுறுத்தலில் தான் இவ்வாறு அதிகாரிகள் நடந்து இருக்கலாம் என தகவல்கள் பரவுகின்றன. இருப்பினும் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோர் 48 மணிநேர விடுப்பில் இருந்ததால் தான் அவர்களால் தமிழிசைக்கு வரவேற்பு கொடுக்க முடியவில்லை என விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனாலும் இதை ஏற்க முடியாது என சிலர் கூறுகின்றனர். அதாவது மாவட்டத்தில் உயரதிகாரிகளான கலெக்டர், எஸ்பி ஆகியோர் ஒரேநேரத்தில் விடுப்பில் சென்றதும் பல கேள்விகளை எழுப்புகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications