அவரு அமித் ஷா இல்லங்க பொய்களின் பாட்ஷா! பேர மாத்திக்க சொல்லுங்க..! வெளுத்து வாங்கிய கேசிஆர் வாரிசு!
ஹைதராபாத் : முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசாங்கத்திற்கு எதிராக பொய்களைப் பரப்பி வருவதாகக் கூறி உள்துறை அமித்ஷாவை பொய்களின் பாட்ஷா என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரின் இரண்டாம் கட்ட பாதயாத்திரையின் இறுதி கட்ட நிகழ்ச்சிக்கான பொதுக்கூட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் டிஆர்எஸ் அரசாங்கத்தை கடுமையாக தாக்கிப் பேசிய அமித் ஷா, தெலுங்கானாவில் ஊழல் நிறைந்துள்ளதாகவும், மக்களுக்கான முக்கிய திட்டங்களை நிறைவேற்ற அரசு தவறியதாக குற்றம் சாட்டினார்.
திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் திடீர் ராஜினாமா.. அமித் ஷாவை சந்தித்த மறுநாளே முடிவு!
அமித் ஷா பேச்சு
அடுத்த ஆண்டு மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலை சந்திக்க தனது கட்சி பாஜக தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு திட்டங்களின் பெயரை மாற்றி, அதில் தனது மற்றும் தனது மகன் படத்தை போட்டு மாநில மக்களை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஏமாற்றுகிறார் எனக் கூறிய அமித் ஷா, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வரும். பாதுகாப்பான மற்றும் வளமான தெலங்கானா மாநிலம் உருவாக பாஜகவை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் எனப் பேசினார்.
கடும் கண்டனம்
இதற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வரும் நிலையில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசாங்கத்திற்கு எதிராக பொய்களைப் பரப்பி வருவதாகக் கூறி உள்துறை அமித்ஷாவை பொய்களின் பாட்ஷா என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கே.டி.ராமாராவ் விமர்சனம்
டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவராகவும், தெலுங்கானாவில் அமைச்சராகவும் இருக்கும் கே.டி.ராமாராவ் அமித் ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசுகையில், "மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியதோடு, பாஜக ஆளும் கர்நாடகாவில் நிலவும் "பெரும் ஊழல்" குறித்தும், 2,500 கோடிக்கு ஈடாக மாநில முதல்வர் பதவியை வழங்குவதாக சிலர் தன்னை அணுகியதாக கர்நாடக பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளையும் குறிப்பிட்டார்.
அமித் ஷா பொய்களின் பாட்ஷா
மேலும் தெலுங்கானா வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்களிப்பு குறித்து அமித் ஷா பேச வேண்டும் என்ற கே.டி.ராமாராவ், தெலுங்கானா மத்திய அரசுக்கு 3.65 லட்சம் கோடி ரூபாய் வரி செலுத்தியதாகவும், அதற்கு ஈடாக 1.68 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது என்றார். மிஷன் பகீரதா திட்டத்திற்கு ₹ 25,000 கோடி வழங்கப்பட்டதாக திரு அமித் ஷா கூறுகிறார். அவரது பெயரை அவசரமாக மாற்ற வேண்டும். அவர் அமித் ஷா அல்ல, பொய்களின் பாட்ஷா என்றும் ராமராவ் மிகக் கடுமையாக விமர்சித்தார்.