குடியரசு தின விழா.. தெலுங்கானா அரசு புறக்கணிப்பது புதிது இல்லை.. வாடிக்கையாகிவிட்டது.. தமிழிசை வேதனை
ஆளுநர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்கிறார்களே தவிர முதல்வர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஏன் கேட்க மறுக்கிறார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஹைதராபாத்: அரசியல் அமைப்பு சட்டத்தின்படி குடியரசு தினம் கொண்டாடப்பட வேண்டும். கொண்டாடப்படவில்லை என்றால் அதை தவறு என்று எண்ணாமல், குடியரசுதினம் கொண்டாடப்படுவது இல்லை என்பதை கொண்டாடினால் நான் என்ன செய்வது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் புதுவையின் துணைநிலை ஆளுநராகவும் உள்ளார். கடந்த ஆண்டு தெலுங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார்.
அதேபோல இந்த ஆண்டும் தெலுங்கானா, புதுவை மாநிலத்தில் ஆளுநர் தமிழிசை தேசியக் கொடியேற்றினார். தெலுங்கானாவில் தமிழிசை தேசியகொடியேற்ற நிகழ்வை முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துவிட்டார். இதனிடையே, குடியரசு தின விழா நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்
தெலுங்கானா அரசு புதிதாக புறக்கணித்தால் பரவாயில்லை. புறக்கணிக்கிறது என்பது அங்கு சாதாரணமாகவே.. வழக்கமாகவே ஆகிவிட்டது. எனக்கு இது புதுமையாக தெரியவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை தந்த அம்பேத்கர் அவர்கள் யாருடைய உரிமை மறுக்கப்பட்டாலும் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று உரிமையை பெறுவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று சொல்லி இருக்கிறார். தெலுங்கானா அரசு குடியரசு தின விழாவை நிச்சயமாகவே குறைத்து மதிப்பிட்டு அரசாங்க விழாவாக நடத்தாமல் அரசாங்கத்தில் இருந்து எந்த அறிவிப்பும் வராமல் அவர்களும் கொடியேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். பொதுமக்களில் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்றதால் உயர் நீதிமன்றம் மிகக்டுமையான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

நேரம் குறைவாக இருப்பதால்
இது 74-வது குடியரசு தினம்.. இதை இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும். புதுச்சேரியில் செய்தது போல கலைஞர்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். குழந்தைகள் பங்களிப்பு இருக்க வேண்டும். பொதுமக்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளே கொடுத்துள்ளனர். ஆனால், அதை அவர்கள் பின்பற்றவில்லை என்பதுதான் பொது நல வழக்கு போட்டவருடைய எண்ணம். இதை நீதிமன்றம் எடுத்துக்கொண்டு கண்டனத்தை தெரிவித்து முழுமையாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை கொடுத்தது. ஆனால் நேரம் குறைவாக இருப்பதால் அரசாங்கம் செய்ய முடியல என சொல்லிவிட்டனர்.

அரசியல் அமைப்பு சட்ட மீறல்
என்னால் தேசியக்கொடிக்கு என்ன மரியாதை செய்ய முடியுமோ அதை செய்துவிட்டு சிறப்பாக செயலாற்றிய 6 பேருக்கு விருது கொடுத்தேன். தெலுங்கானாவில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஏன் ஆளுநர் மாளிகையில் நடத்த சொன்னீர்கள் என்று நீங்களே கேளுங்கள். நீதிமன்றமும் அதைத்தான் கேட்டுள்ளது. நான் என்ன செய்வது. தெலுங்கானாவில் நடைபெற்றது சட்ட மீறல், மரபு மீறல், அரசியல் அமைப்பு சட்ட மீறல் என அனைத்தும் தான் நடைபெற்றுள்ளது.

கொண்டாடப்பட வேண்டும்
தெலுங்கானாவில் விதி மீறல் இருக்கு.. ஆனால்அதை இங்கே உள்ள சில பத்திரிகைகள் சந்தோசமாக எழுதுறாங்க.. அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை அவர்கள் மீறுகிறார்கள். அது இங்கே உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதா? அரசியல் அமைப்பு சட்டத்தின்படி குடியரசு தினம் கொண்டாடப்பட வேண்டும். கொண்டாடப்படவில்லை என்றால் அதை தவறு என்று எண்ணாமல் அதை குடியரசுதினம் கொண்டாடப்படுவது இல்லை என்பதை கொண்டாடினால் நான் என்ன செய்வது.

ஏன் கேட்க மறுக்கிறார்கள்
எல்லா அதிகாரமும் ஆளுநருக்கு உள்ளது. ஆளுநர்கள் அதிகாரத்தை பயன்படுத்தினால் உடனே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஆளுநர் அதிகாரம் செலுத்துகிறார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள்.. அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்றால் பயன்படுத்தவில்லை என்று சொல்கிறார்கள்..தெலுங்கானா மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து ஆளுநரை அவர் எதிர்க்கிறார். அதனால், எனக்கு இதைப்பற்றி கவலை இல்லை. ஆளுநர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்கிறார்களே தவிர முதல்வர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஏன் கேட்க மறுக்கிறார்கள்

வாழ்க்கையை கெடுக்கக் கூடாது
தெலுங்கானா அரசு நடந்துகொண்ட விதம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசுக்கு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். அதன்படி அறிக்கை அனுப்பி வருகிறேன். அதிகாரிகள் மீது தனி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் நானே எடுக்கலாம். ஆனால் அவர்களின் வருங்காலம் பாதிக்கப்படும். அதிகாரிகள் மீது பிளாக் மார்க் வரக்கூடாது என்பதால் நான் நடவடிக்கை எடுப்பது இல்லை. ஏனெனில் அவர்களாக வராமல் இல்லை. அவர்களுக்கு அறிவுறுத்தல் வருகிறது. அதனால் வராமல் இருக்கிறார்கள். இன்னொருவருடைய வாழ்க்கையை கெடுக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications