எனக்கு ஒரு சத்தியம் செய்யுங்களேன்! ஆங்கிலத்தில் பேசிய மாணவன்! ஆந்திர முதல்வரிடம் கேட்டது என்ன?
ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை இன்று அரசு பள்ளி மாணவர்கள் சந்தித்து ஆங்கிலத்தில் பேசி அசத்தினர். இந்த வேளையில் 7 ம் வகுப்பு மாணவன், அரசு பள்ளியில் ஆங்கிலம் கற்றலை மேம்படுத்தியதற்கு நன்றி தெரிவித்ததோடு,நான் ஐஏஎஸ் ஆனபின் உங்களின் பிஏவாக சேர்த்து கொள்வேன் என சத்தியம் செய்யும்படி கேட்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
Recommended Video
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி முதல் அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவர் ஆட்சிக்கு வந்தது முதல் அரசு பள்ளிகளில் சில புதிய திட்டங்களை வகுத்தார்.
குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வேண்டும் என விரும்பினார். இதற்கும் வழிவகை செய்தார். இந்நிலையில் இன்று முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

மாணவர்களுடன் சந்திப்பு
அப்போது மாணவ-மாணவிகள் ஆங்கிலத்தில் உரையாடினர். அவர்கள் அனைவரும் ஆங்கில மொழியை உரிய முறையில் உச்சரித்து பேசி வியப்பில் ஆழ்த்தினர். அதன்பிறகு மாணவ-மாணவிகள் முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் உரையாடி குழு புகைப்படம் எடுத்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிறந்த திட்டம்
இந்த வேளையில் 7 ம் வகுப்பு படிக்கும் மாணவன் அனுதீப், ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசினார். அப்போது அவன் ஆங்கில மொழியில், ‛‛அரசு பள்ளியில் ஆங்கில கற்றலை மேம்படுத்தும் திட்டம் பற்றி பேசுகிறேன் சார். இது மிகவும் சிறந்த திட்டம். இத்திட்டத்தை வழங்கியதற்கு நன்றி. உங்களுக்கான வேலை சுமை அதிகமாக இருக்கும், விமர்சனங்களும் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

ஐஏஎஸ் கனவு
ஆனால் உங்களுக்கு ஆதரவு கொடுக்க தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.எத்தகைய சூழலிலும் உங்களின் பின்னால் நாங்கள இருப்போம். எந்த சூழல் வந்தாலும் அரசு பள்ளியில் ஆங்கில மொழி கற்றல் திட்டத்தை கைவிட்டுடாதீங்க. நான் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக விரும்புகிறேன். நான் ஐஏஎஸ் அதிகாரியாக ஆகும் வரை முதல்வர் இருக்கையில் நீங்கள் இருக்க வேண்டும். நான் ஐஏஎஸ் அதிகாரியாக ஆனவுடன் என்னை உங்களின் பிஏவாக(உதவியாளர்) நியமிக்க வேண்டும்.

சத்தியம் செய்வீர்களா?
அப்போது உங்களை விமர்சனம் செய்யும் நபர்களின் வாயை நான் மூடச்செய்வேன். இதை செய்வேன் என சத்தியம் செய்கிறேன். நீங்கள் எனக்கு சத்தியம் செய்வீர்களா?'' என வினவினார். இதனை கேட்ட ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அதிகாரிகள் அனைவரும் சிரித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications