நேபாள பயணத்தில் உணர்ச்சிகரம்... 16 வருடங்கள் மோடி வளர்த்த ‘தர்மபுத்திரன்’ பெற்றோரிடம் ஒப்படைப்பு
டெல்லி: தனது நேபாள பயணத்தின் ஒருகட்டமாக தான் 16 வருடங்களாக வளர்த்து வந்த நேபாள இளைஞரை அவனது பெற்றோரிடம் ஒப்படைக்க இருக்கிறார் பிரதமர் மோடி.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று நேபாளம் நாட்டுக்கு செல்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு அந்நாட்டு பிரதமரைச் சந்திக்கும் மோடி, இருதரப்பு உறவுகள் மேம்பாடு குறித்து பேசுகிறார். பொருளாதாரம், மின்சாரம் மற்றும் பண்பாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறார்.
இந்தப் பயணத்தில் தனது தனிப்பட்ட ஒரு உணர்ச்சிமயமான கடமையை நிறைவேற்ற இருக்கிறார் மோடி. அதாவது தான் வளர்த்து வந்த நேபாள வாலிபரை, அவரது பெற்றோரிடம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மோடி ஒப்படைக்கிறார்.
இது குறித்து மோடி கூறியதாவது :-
சிறப்பான பயணம்...
தனிப்பட்ட முறையில் இந்த நேபாளப் பயணம் எனக்கு சிறப்பான ஒன்றாக அமைகிறது.
உதவியற்ற நிலையில்...
சில வருடங்களுக்கு முன் நான் ஜீத் பகதூர் என்ற நேபாள குழந்தையை சந்தித்தேன். அப்போது அந்த சிறுவனுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. உதவியற்ற நிலையில் அவன் இருந்தான். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனுக்கு யாரையும் தெரியவில்லை. மொழியும் தெரியவில்லை.
கரிசனம்...
இதையடுத்து அந்தச் சிறுவன் மீது கரிசனம் காட்டத் தொடங்கினேன். அவனுக்கு படிப்பு, விளையாட்டு, குஜராத்தி மொழி மீதும் ஆர்வம் வந்தது.
6 விரல் அடையாளம்....
சில காலத்துக்கு முன்புதான் வெற்றிகரமாக அவனது பெற்றோர் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன். அவனது காலில் 6 விரல்கள் இருக்கின்றன. இது அவனைப்பற்றிய அடையாளத்தை சொல்லி, பெற்றோரைக் கண்டுபிடிக்க உதவிகரமாக இருந்தது' எனத் தெரிவித்துள்ளார்.
மோடியின் தர்மபுத்திரன்...
தங்களது மகனான ஜீத் பகதூரை படிக்க வைத்து, அனைத்து வசதிகளையும் செய்துதந்து, தனது பிள்ளையைப் போல மோடி நடத்தியதால், அவரது தர்மபுத்திரன் போலவே கருதுவதாக ஜீத்தின் பெற்றோர் கூறியுள்ளனர்.
மோடிஜியின் கவனிப்பு...
இது தொடர்பாக ஜீத்தின் தாய் கூறுகையில் , ‘என் மகன் பிழைப்பு தேடி 1998-ம் வருடம் இந்தியா போனான். அப்போது அவனுக்கு 10 வயது. முதலில் ராஜஸ்தான் போய் பின்னர் குஜராத் சென்றிருக்கிறான். ஒரு பெண்தான் அவன் மோடிஜியை சந்திக்க உதவி இருக்கிறார். அதிலிருந்து அவனை மோடிஜிதான் கவனித்து வந்திருக்கிறார்'' என்றார்.
பி.பி.ஏ. பட்டதாரி...
10 வயதில் சிறுவனாகப் பெற்றோரைப் பிரிந்து வந்த ஜீத் பகதூர், மோடியின் பராமரிப்பில் வளர்ந்து, தற்போது 26 வயது இளைஞராக, ஒரு பி.பி.ஏ. பட்டதாரியாக அவரது பெற்றோரிடம் மோடியால் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சி...
16 வருடங்களுக்குப் பிறகு தங்களது மகன் தங்களோடு இணைந்ததில் மகிழ்ச்சியடைந்த அக்குடும்பத்தார், மோடியுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.