மோடி அரசின் புதிய சட்டத்தால், 18 லட்சம் பெண்கள் வேலை இழக்க கூடும்.. எச்சரிக்கை சர்வே!
Recommended Video

டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள பேறு கால விடுப்பு தொடர்பான புதிய சட்டம் காரணமாக இந்தியாவில், சுமார் 18 லட்சம் பெண்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது என்கிறது ஒரு சர்வே.
12 வாரங்களாக (3 மாதங்கள்) இருந்த, சம்பளத்துடன் கூடிய பேறு கால விடுமுறை நாட்களை, 26 வாரங்களாக அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது மத்திய அரசு.
கனடா, நார்வே போன்ற நாடுகளுக்கு பிறகு, மகப்பேறு காணும் மகளிருக்கு அதிக நலன் பயக்கும் ஒரு சட்டமாக இது பார்க்கப்பட்டது. ஆனால், அது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறது டீம்லீஸ் சர்வீசஸ் லிமிட்டட் (TeamLease Services Ltd) என்ற நிறுவனம் நடத்திய சர்வே.

18 லட்சம் வேலை
அந்த சர்வே மேலும் கூறுவதை பாருங்கள்: 2019ம் ஆண்டுக்குள் மொத்தம் 10 துறைகளில் அதிகபட்சமாக, 1.8 மில்லியன் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் இந்த சட்டத்தால் உருவாகியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு மொத்த பணியாளர்களில் 36 சதவீதம் பெண்களாக இருந்த இந்தியாவில், 2016 கணக்கெடுப்புப்படி பெண் பணியாளர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாக சுருங்கியிருந்தது. இந்த சூழ்நிலையில், பெண்களின் பங்களிப்பை, புதிய சட்டம் மேலும் குறைத்துவிடும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

பெரு நிறுவனங்களுக்கு ஓகே
விமானத்துறை, ஐடி துறை, ரியல் எஸ்டேட், கல்வி, இ-காமர்ஸ், உற்பத்தி, வங்கி, சுற்றுலா, சில்லரை வணிகம் மற்றும் நிதி சேவைகள் துறைகளை சேர்ந்த 300 ஊழியர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. பெரிய மற்றும் தொழில்முறை நிறுவனங்கள் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், பெண்களை வேலைக்கு எடுக்க தயங்கும் சூழல் உருவாகியுள்ளது. பெண்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு இத்தனை நீண்ட காலம் சம்பளத்துடன் பேறு கால விடுப்பு அளிப்பது உற்பத்தி திறனை பாதிப்பதோடு, செலவீனங்களை அதிகரிப்பதாகவும் அமைகிறது என கருதுகிறார்களாம்.

பிற நாடுகள்
"இதுபோன்ற சலுகைகள் அதிகரிக்கப்படும்போது, அதற்கு இழப்பீடாக வரி சலுகைகளை நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் நடைமுறை உலகின் பல பகுதிகளில் உள்ளது. ஆனால், இந்தியாவில் அது இல்லை" என்கிறார், இஎம்ஏ பார்ட்னர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவன மேலாண் பார்ட்னர் கே.சுதர்ஷன். சிறு மற்றும் குறு கம்பெனிகள் குறைந்த அளவுக்கான பணியாட்களை கொண்டு இயங்குபவை. மொத்தமே 5 ஊழியர்களை கொண்ட ஒரு நிறுவனத்தில், 2 பெண்கள் பேறுகாால விடுப்பு எடுத்தால், அந்த நிறுவனமே ஆடிப்போய்விடும் என்கிறார் அவர்.

மக்கள் தொகை அதிகம்
மக்கள் தொகை குறைந்த நாடுகளில் பணியாட்களுக்கான தேவை அதிகம். எனவே இதுபோன்ற சலுகைகளை அந்த நாடுகளில் வழங்கும்போது, பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இந்தியா போன்ற மிகை மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும் சூழலில், பெண் ஊழியர்களை தவிர்ப்பதை பல நிறுவனங்கள் விரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications