கோவிட் 19 நோயாளியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.. பெரும் பிரச்சினைக்கு பிறகு உடல் தகனம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கோவிட் 19 பாதிப்பால் இறந்த முதல் நபரின் உடலை வாங்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து 10 மணி நேர தாமதத்திற்கு பிறகு மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டம் டம்டம்மை சேர்ந்த 57 வயது முதியவர் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டு மார்ச் 20-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுள் இவர் 4ஆவது நபராவார். இவர் நேற்று மாலை 3.35 மணிக்கு பல்வேறு உறுப்புகள் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.
உலக சுகாதார நிறுவனம்
இவர் அண்மையில் வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இவரது குடும்ப உறுப்பினர்களும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். கோவிட் பாதித்த நபரின் உடலை தகனம் செய்ய சில வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. எனவே இதை உறவினர்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதால் அவரது உடலை மருத்துவமனை அதிகாரியின் மேற்பார்வையில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யயப்பட்டது.
கையெழுத்து
எனினும் அவரது உடலை தகனம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் ஒருவராவது கையெழுத்திட வேண்டும். எனினும் இவரது உறவினர்கள் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதற்கு கூட மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டனர். அந்த நபரின் மனைவியிடம் கையெழுத்து வாங்கலாம் என நினைத்தால் அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனினும் அவரிடம் இருந்து கையெழுத்து பெற்றனர்.
நுழையக் கூடாது
இதையடுத்து அரசு நடைமுறைகளின் படி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து அந்த உடலை தகனம் செய்ய நிம்டலா சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த உள்ளூர் மக்கள் அந்த உடல் தங்கள் பகுதியில் நுழையக் கூடாது என தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு மாவட்ட நிர்வாகத்தினருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடல் தகனம்
இதையடுத்து போலீஸார் தலையிட்டு இந்த பிரச்சினையை முடித்து வைத்தனர். ஒரு வழியாக நேற்று இரவு 9 மணிக்கு அவரது உடல் தகன மேடையில் வைக்கப்பட்டது. அப்படியும் பிரச்சினை முடிந்தபாடில்லை. இதையடுத்து டம்டம் பகுதியில் வசிக்கும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட உறவினர்களை அவர்களது பகுதியில் அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து நேற்று நள்ளிரவு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.