காதல் தகராறு:3 பேர் உயிருடன் எரித்துக்கொலை… 14 பேர் கைது
பாட்னா: பீகாரில் காதல் தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்
முசாபர்பூர் அருகே அஜித்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பர்தெண்டு குமார் என்ற 19 வயது வாலிபர் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவருக்கும் இடையே ஒரு பெண்ணைக் காதலிப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 9ஆம் தேதி காணாமல் போன பர்தெண்டு குமார், விக்கியின் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விக்கியும் அவரது தந்தையும் தான் பர்தெண்டு குமாரை கடத்தி சென்று கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். தனது மகனை கடத்திச் சென்று கொலை செய்ததாக பர்தேந்து குமாரின் தந்தை போலீசில் புகார் செய்தார்.

குமாரின் கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒரு சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். வாசி அகமதுவின் வீடு உள்பட 9 வீடுகள் எரிக்கப்பட்டன.
இதில், மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்து, மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆர்.கே.மிஸ்ரா கூறியதாவது:
சம்பவம் தொடர்பாக, இதுவரை வாசி அகமது உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்பூர் கிராமம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பிகார் சிறப்புப்படை போலீஸார் 500 பேர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
முதல்வர் உத்தரவு
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மும்பையில் முகாமிட்டிருந்த பீகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி, தமது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திங்கள்கிழமை பாட்னா திரும்பினார்.
நிலைமையை ஆய்வு செய்த அவர், இது குறித்து விசாரிக்கும்படி மாநில முதன்மை உள்துறைச் செயலாளர் சுதிர் குமார், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் குப்தேஷ்வர் பாண்டே ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையையும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையையும் வழங்க மாஞ்சி உத்தரவிட்டார்.
சம்பவத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும், உடைமைகளை இழந்தோருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதற்கிடையே, காதல் தகராறில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பீகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் உள்பட பலரும் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications