'பப்ஜி' விளையாடியதை கண்டித்ததால்.. தாய் உள்பட மொத்த குடும்பத்தையே சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!
லாகூர்: பாகிஸ்தானில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 14 வயது சிறுவன் தனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை சுட்டுக் கொன்றான். நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் சிறுவன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று போலீசார் கூறினார்கள்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தவர் நஹித் முபாரக்(45). சுகாதாரப் பணியாளர். இவருக்கு 22 வயதில் நஹித் முபாரக் என்ற மகனும் மற்றும் 14 வயதில் வேறு ஒரு மகனும், 2 மகள்களும் இருந்தனர். நஹித் முபாரக் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்
இந்த நிலையில் தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் கடந்த வாரம் நஹித் முபாரக், அவரது மகன் தைமூர் மற்றும் இரு மகள்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான நஹித் முபாரக்கின் 14 வயது மகன்தான் தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

PUBG விளையாட்டுக்கு அடிமை
PUBG விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் எந்த நேரமும் அதனை விளையாடி வந்துள்ளான். இரவு வேளையில் நஹித் முபாரக் இதனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது தாயின் கைத்துப்பாக்கியை அலமாரியில் இருந்து எடுத்து தாய் நஹித் முபாரக்கையும், தூங்கி கொண்டிருந்த மற்ற 3 உடன்பிறப்புகளையும் சுட்டுக் கொன்றுள்ளான். பின்னர் துப்பாக்கியை சாக்கடையில் அவன் வீசி விட்டான்.

மனரீதியாக பாதிப்பு
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குடும்பமே பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் கொலை குற்றவாளி சிறுவன் வீட்டின் மேல் மாடியில் இருந்ததாகவும், தனது குடும்பம் எப்படி கொல்லப்பட்டது? என்று தெரியவில்லை என அவன் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர். நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் சிறுவன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று போலீசார் கூறினார்கள்.

போலீசார் கூறுவது என்ன?
படிப்பில் கவனம் செலுத்தாததற்காகவும், PUBG விளையாட்டில் அதிக நேரத்தை செலவிடுவதற்காகவும் சிறுவனை நஹித் முபாரக் அடிக்கடி எச்சரித்து வந்ததாகவும், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நஹித் வாங்கியது என்றும் போலீசார் தெரிவித்தனர். லாகூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் PUBG விளையாட்டுக்கு அடிமையாகி, மனரீதியாக பாதிக்கப்பட்டு 3 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications