பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க கூடாது: ஹைகோர்ட் தீர்ப்பு
அகமதாபாத்: பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிய 14 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கர்ப்பத்தை கலைக்க உத்தரவிட முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 20 வாரங்களை கடந்த கருவை கலைக்க தற்போதுள்ள சட்டத்தில் இடமில்லை என்பதே நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு காரணம்.
குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தைராயிடு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக ஆண் டாக்டர் ஒருவரிடம் ரெகுலராக சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று, சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு மயக்க ஊசி போட்ட டாக்டர், மயக்க நிலையிலேயே சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

மயக்கம் தெளிந்ததும், நடந்தவற்றை தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். எனவே, அவர் போலீசில் புகார் அளித்தார். டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்துவிட்டார். ஏற்கனவே பலாத்கார புகார் நிலுவையிலுள்ளதால், கோர்ட் அனுமதி பெற்று கருவை கலைக்க சிறுமியின் தந்தை முடிவு செய்து, ஹிமாத்நகர் செஷன்ஸ் கோர்ட்டில் அனுமதி கேட்டார்.
ஆனால், அப்போது சிறுமியின் கர்ப்பம் 20 வாரங்களை தாண்டிவிட்டதால், கருவை கலைக்க உத்தரவிட முடியாது என்று நீதிபதி அறிவித்துவிட்டார். தற்போதுள்ள சட்டத்தின்படி 20 வாரம் தாண்டிய கருவை கலைக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.
இதையடுத்து குஜராத் ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை. 14 வயதான தனது மகளால், விருப்பம் இல்லாமல் பெறும் குழந்தையை வளர்க்க முடியாது. அதற்கான பக்குவமும் எனது மகளுக்கு இல்லை என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதி அபிலாஷா குமாரி விசாரித்தார். இருப்பினும், சட்டப்படி, கருவை கலைக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று இன்று ஹைகோர்ட்டும் கைவிரித்துவிட்டது. தற்போது அச்சிறுமி 24 வார கர்ப்பவதி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications