6 நாளில் 15 பச்சிளம் குழந்தைகள் மரணம்... காரணத்தை கண்டறிய அசாம் அரசு விசாரணைக்கு உத்தரவு!
கௌஹாத்தி : அசாமின் ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நவம்பர் 1 முதல் 6ம் தேதி வரையில் மட்டும் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் என்ன என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ளது ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் தான் நவம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குழந்தைகள் மரணம் குறித்து அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சௌரவ்பர்காகோடி கூறுகையில் "சில சமயங்களில் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான நோயாளிகள் வந்து அனுமதிக்கப்படுவர். உயிரிழந்த குழந்தைகள் பிறப்பதற்கு முன்னர் கர்ப்பிணிப் பெண்கள் எந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளத. பிரசவ வலி வந்த பிறகு சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்திருக்க மாட்டார்கள், அல்லது குழந்தைகள் குறைவான எடையுடன் பிறந்திருக்கும் உள்ளிட்ட காரணங்களும் இருக்கின்றன என்றார்.
141 படுக்கை வசதி மட்டுமே கொண்ட மருத்துவமனையில் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர்க்க முடியாத சூழல்களில் குழந்தைகளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியதாகிவிடுகிறது. எனினும் 15 குழந்தைகள் மரணத்திற்கான காரணம் என்ன என்று விசாரிக்க 6 நபர் கொண்ட தனி விசாரணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக பர்காகோடி கூறியுள்ளார்.
முதல் முறையாக உங்களிடம் கையேந்துகிறேன்.. கெளசல்யாவின் வேண்டுகோள்!
எனினும் மருத்துவமனை சரியான அளவில் சிகிச்சை அளிக்காததே பச்சிளம் குழந்தைகள் மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. எனவே மாநில அரசும் தனியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, யுனிசெஃப்-ன் மருத்துவ கல்வி இயக்குனர், கௌத்தி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் மற்றும் அசாம் மருத்துவக்கல்லூர மருத்துவமனையின் மருத்துவர்களை உள்ளடக்கிய குழு குழந்தைகள் இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து அளிக்கை அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.