188 என்ஜிஓ நிறுவனங்கள் மீது நடவடிக்கை... களத்தில் குதிக்கிறது மத்திய அரசு!
டெல்லி: தீவிரவாதத்திற்கும், அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் துணை போகும், நிதியுதவி அளிக்கும் என்ஜிஓ நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மொத்தம் 188 என்ஜிஓ நிறுவனங்கள் குறித்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு நிதி வரும் ஆதாரம் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கையும் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. தவறு செய்த நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இதில் எந்தவிதமான நெருக்கடிகளுக்கும் அரசு பணியாது என்றும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலை மத்திய உளவுப் பிரிவான ஐபி தயாரித்துள்ளது. இதுகுறித்து கடந்த 2006ம் ஆண்டே ஐபி விசாரணையைத் தொடங்கி விட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கவலைக்குரிய அம்சம்:
இதில் இரண்டு விதமான கவலைகளை மத்திய அரசு கொண்டுள்ளது. இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சில, அரசின் வளர்ச்சித் திட்டங்களை முடக்குவதற்காக சிலரிடமிருந்து நிதியுதவியைப் பெறுகின்றனவாம். சில நிறுவனங்கள், தீவிரவாதம், நக்சலைட் போன்ற போராளிகளுக்கு நிதியுதவி செய்ய பணம் பெறுகின்றனவாம்.
என்ஜிஓ நிறுவனங்களை பாஜக அரசு வேண்டும் என்றே குறி வைத்து வேட்டையாடுவதாக சில என்ஜிஓ நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால் அதை ஐபி அதிகாரி ஒருவர் மறுக்கிறார்.
தங்களது கை சுத்தமாக இருந்தால் அந்த என்ஜிஓ நிறுவனம் பயப்படவே தேவையில்லை. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 25 லட்சம் என்ஜிஓ நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, விசாரிக்கவில்லை என்றும் அந்த ஐபி அதிகாரி கூறுகிறார்.
அந்த நிறுவனங்களில் 188 நிறுவனங்கள் மட்டுமே பட்டியல் எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு பணம் வரும் வழி குறித்த சந்தேகம் வலுத்ததால்தான் இவை கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறுகிறார்.
நக்சலைட்கள் போல செயல்படும் என்ஜிஓக்கள்
ஐபி விசாரணையின்போது பல என்ஜிஓ நிறுவனங்கள் நக்சலைட்டுகள் போல செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் பெருமளவில் வருகிறது. இந்தப் பணத்தை வைத்து நாட்டில் ஏழைகள், நலிவடைந்த பிரிவினரைத் தூண்டி, அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வேலையை இந்த நிறுவனங்கள் செய்கிறதாம்.
இவர்களுக்கு ஏற்கனவே ஐபி பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளதாம். தவறுகளைத் திருத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் போயுள்ளதாம். ஆனாலும் அவர்கள் திருந்தியது போலத் தெரியவில்லை என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.
தங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பணத்திற்கு இவர்கள் காரணம் காட்டினாலும் கூட, அரசுக்கு எதிரான செயல்பாடுகளுக்கே அது செலவிடப்படுகிறது என்பதால்தான் இவை மீது விசாரணையும், நடவடிக்கையும் அவசியமாகிறது என்பது அந்த அதிகாரியின் வாதமாகும்.
நக்சலைட்கள் நேரடியாக மக்களுக்காக என்ற பெயரில் அரசுப் படைகளுடன் மோதுகிறார்கள். ஆனால் இந்த நிறுவனங்கள் பணத்தை வைத்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். இதுதான் இவர்களுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம் என்று கூறுகிறார் இந்த அதிகாரி.
வங்கதேச என்ஜிஓக்கள்
ஐபியின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் ரிவைவல் ஆப் இஸ்லாமிக் ஹெரிடேஜ் சொசைட்டி, ரபீதா அல் ஆலம் அல் இஸ்லாமி, சொசைட்டி ஆப் சோசியல் ரிபார்ம்ஸ், கத்தார் சாரிட்டபிள் சொசைட்டி, அல் முன்டடா அல் இஸ்லாமி, இஸ்லாமிக் ரிலீப் ஏஜென்சி, அல் போர்கான் பவுண்டேஷன், இன்டர்நேஷனல் ரிலீப் ஆர்கனைசேஷன், குவைத் ஜாயின்ட் ரிலீப் கமிட்டி, முஸ்லீம் எய்ட் பங்ளாதேஷ் ஆகியவையும் உள்ளன. இவை அனைத்தும் வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்புக்கு ஆதரவான என்ஜிஓ அமைப்புகள் ஆகும்.
இந்த நிறுவனங்கள் முதலில் வங்கதேசத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்காக பணம் கொடுத்து உதவி் வந்தன. பின்னர் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் இவை நிதியுதவி அளித்து வந்துள்ளன.
மத்திய அரசு துரிதமாக செயல்படாவிட்டால் இவர்கள் அல் கொய்தா, சிமி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் நிதியுதவி அளிக்கும் அபாயம் ஏற்படும் என்று ஐபி எச்சரிக்கிறது.
எதிர்கால நடவடிக்கை
எனவே பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ள 188 என்ஜிஓக்களையும் தீவிரமாக கண்காணிக்க, விசாரிக்க, நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இவர்களை கண்காணிக்குமாறு ஏற்கனவே மத்திய அமலாக்கத் துறை, மத்திய நேரடி வரிவாரியம் ஆகியவற்றுக்கு உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுநாள் வரை இந்த நிறுவனங்கள் வெறுமனே கண்காணிக்கப்பட்டு மட்டும் வந்தன. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரிப்பு, மதமாற்றஹ்கள் உள்ளிட்டவை அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்து விட்டதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.