ஆந்திராவில்.. 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறினர்.. இதுதான் காரணம்!
விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலத்தில் 2020-21 கல்வியாண்டில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதேபோல் 60,000 பேர் பள்ளி படிப்பையே கைவிட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருந்து வருகிறது. கொரோனாவால் நாட்டின் பொருளாதாரமே அடியோடு முடங்கியது. அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு தற்போதுதான் மீண்டு வருகிறது.
கொரோனா காரணமாக மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடிக்கிடக்கும் நிலையில் நாட்டில் இன்னும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை.

2 லட்சம் மாணவர்கள்
இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தில் 2020-21 கல்வியாண்டில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஆந்திர கல்வித் துறையின் தரவுகளின்படி, தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களின் எண்ணிக்கை சரியாக 2,02,599 ஆகும். அதே வேளையில் 8,448 பேர் அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.

பள்ளி படிப்பை கைவிட்டவர்கள்
இதேபோல் 60,000 பேர் பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் சுமார் 10 லட்சத்துடன் ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 72,33,040 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் 3,57,873 மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினர் அல்லது பிற பள்ளிகளுக்குச் செல்வதற்கான பரிமாற்ற சான்றிதழ்களை(டி.சி ) பெற்றுக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

காரணம் என்ன?
2020-21 கல்வியாண்டில் பள்ளி படிப்பை கைவிட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழப்பு, தனிநபர் வருமானம் இழப்பு, நீண்ட காலம் பள்ளிகள் பூட்டியே இருத்தல் போன்ற காரணங்களால் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு ஓடுவதும், ஒரு சிலர் பள்ளி படிப்பையே கைவிடுவதும் தெரியவந்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதி
இதேபோல் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் அதிகம் நடப்பதால் ஆன்லைன் வகுப்புகளுக்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததாலும் ஏராளமான மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாறியுள்ளனர். இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊரடங்கு போடப்பட்டதால் வருமான இழப்பு காரணமாக சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளது. இது தவிர அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு தனியார் பள்ளிகளுக்கு நிகராக உள்ளது. இதுவும் மாணவர்களை அரசு பள்ளிகளை ஈர்த்து வருகிறது' என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications