‘பாஸ்ட் புட்’களில் 20% தரமற்றவை... ஜீரணிக்க முடியாத ‘திடுக்’ தகவல்
டெல்லி: நாடு முழுதும் விற்கப்படும் பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளில் 20 சதவீதம் தரம் குறைந்தவைகளாக இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வயது வித்தியாசமின்றி பாஸ்ட் புட்டின் ருசிக்கு மக்கள் அடிமையாகி வருகின்றனர். இதற்கு மற்றொரு முக்கியக் காரணம், பெரிய உணவு விடுதிகளில் மட்டுமல்லாது இத்தகைய துரித உணவுகள் சாலையோர உணவுக் கடைகளிலும் மலிவான விலையில் கிடைப்பது தான்.
ஆனால், இவ்வாறு தயாரிக்கப் படும் அனைத்து துரித உணவுகளும் தரமானவைகளாக இருப்பதில்லை என்ற உண்மை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

புகார்கள்...
துரித உணவுகளின் தரம் தொடர்பாக பெறப்படும் புகார்களின் அடிப்படையில், மாநில, யூனியன் பிரதேச அரசு அதிகாரிகள் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் - 2006-ன்படி உணவகங்களைக் கண்காணித்து வருகின்றனர்.

ஆய்வு...
அந்தவகையில் 2013-14 கால கட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு துரித உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் இருந்து, பால், பால் பொருட்கள், எண்ணெய்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு சோதனைக்கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டன.

தரமற்றவை...
இவ்வாறு 46 ஆயிரத்து 283 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில், 9 ஆயிரத்து 265-க்கும் அதிகமான மாதிரிகள் தரம் குறைந்த அல்லது மட்டமான பொருட்களில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

20 சதவீதம்...
அதாவது தயாரிக்கப்படும் மொத்த அளவில் இது 20 சதவீதம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முதலிடம்...
சமீபகாலமாக பாலியல் குற்றங்களில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள உத்திரப்பிரதேசத்தில் தான், தரம் குறைந்த உணவு பொருட்கள் அதிகம் தயாரிக்கப் படுவதாக ஆய்வு சொல்கிறது.

தண்டனை...
2013-14 கால கட்டத்தில், இங்கு 2 ஆயிரத்து 930 கடை உரிமையாளர்கள் மீது புகார் செய்யப்பட்டும், இதில் 1,919 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டும் உள்ளது. மேலும் இந்த மாநிலத்தில் இருந்து ரூ.4.47 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2வது இடத்தில்...
தரமற்ற உணவுகள் தயாரிக்கும் உணவு விடுதிகள் பட்டியலில் அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 2,557 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 66 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.

3வது இடத்தில்...
மூன்றாவது இடத்தில் உள்ள அரியானாவில் 260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 166 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில்...
இந்த வரிசையில், உத்தரகாண்ட், ஜார்கண்ட், பீகார், டெல்லி போன்ற மாநிலங்களும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதிர்ச்சி...
நகர்ப்புறங்களை தொடர்ந்து கிராமப்புறங்களிலும் துரித உணவகங்கள் முளைத்து வரும் நிலையில், அங்கு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் தரம் குறைந்தவை என கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications