குஜராத் கலவரம்... பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது
காந்திநகர்: குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் இறந்தனர். இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து குஜராத் மாநிலம் முழுவதும் மோதல்கள் வெடித்தன.
இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானவர்கள் கொலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார்.
TIMELINE: உலகை உலுக்கிய குஜராத் கலவரம்.. ரயில் எரிப்பு முதல் படுகொலைகள் வரை! ஆறாத வடுக்கள்
வழக்கு தள்ளுபடி
இதுதொடர்பான சிறப்பு விசாரணை குழு விசாரித்தது. அப்போதைய முதல்வர் மோடி உள்பட 64 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத்தும் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் 2002 கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு சிறப்பு விசாரணை குழு க்ளீன்சீட் வழங்கி உள்ளதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
சமூக ஆர்வலர் உள்பட 3 பேர் மீது வழக்கு
இந்நிலையில் தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்பி ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது டீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எந்தெந்த பிரிவுகளில் வழக்கு
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் கைது
இந்நிலையில் தான் இன்று மும்பையின் ஜூஹூவில் உள்ள டீஸ்டா செதல்வாட் வீட்டுக்கு குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் அங்கிரந்து மும்பையின் சாண்டாகுரூஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து குஜராத் மாநிலம் அழைத்து செல்லப்பட உள்ளார்.
அமித்ஷா கூறியது என்ன?
முன்னதாக குஜராத் கலவரம் தொடர்பாக டீஸ்டா செதல்வாட் போலியான ஆவணங்களை விசாரணை குழுவிடம் வழங்கியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.