உங்களுக்கு 17.. எங்களுக்கு 17.. பீகாரில் பாஜக கூட்டணி முடிவானது.. லோக் சபா தேர்தலுக்கு ரெடி!
பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
Recommended Video
பாட்னா: பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. பீகாரில் லோக் சபா தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே கட்சிகள் தயாராகி வருகிறது. இதில் பீகார் மற்றும் உத்தர பிரதேசம் மிக முக்கியமான இரண்டு மாநிலங்களாக பார்க்கப்படுகிறது.
இன்னும் முழுதாக 5 மாதங்கள் தேர்தலுக்கு இருக்கும் நிலையில், இப்போதே கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அடித்து ஆட தொடங்கி உள்ளார்.
பீகார் ஏன் முக்கியம்
உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக பாஜக பீகாரில் மிகவும் வலுவான கட்சியாகும். பீகாரில் மொத்தம் 40 லோக் சபா இடங்கள் உள்ளது. சென்ற முறை 2014ல் நடந்த தேர்தலில் பாஜக அங்கு 40க்கு 31 இடங்களை வென்று சாதனை படைத்தது. உத்தர பிரதேசம் போலவே பாஜக இங்கு அதிக தொகுதிகளை வெல்வதில் குறியாக உள்ளது.
கூட்டணி உருவானது
தற்போது பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. லோக் சபா தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி பார்ட்டி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் இன்று கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டது.
எத்தனை இடங்கள்
அதன்படி பீகாரில் உள்ள 40 லோக் சபா இடங்களில் 17 இடங்களில் பாஜக போட்டியிட உள்ளது. 17 இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட உள்ளது. 6 இடங்களில் லோக் ஜனதா சக்தி போட்டியிட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று அமித் ஷா வெளியிட்டார்.
காங்கிரஸ் கூட்டணி
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இருந்த ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி (ஆர்எல்எஸ்பி ) அந்த கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டது. இந்த ஆர்எல்எஸ்பி கட்சி காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பீகாரில் தற்போது காங்கிரஸ், ஆர்எல்எஸ்பி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.