மும்பை தீவிரவாத தாக்குதல்.. வழக்கை இழுத்தடித்து பாகிஸ்தான் வம்பு
மும்பை: மும்பை தாக்குதல் நடந்து 9 வருடங்கள் ஆகிவிட்டது. லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 10 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் அதிருஷ்டவசமாக அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி இந்திய பாதுகாப்பு படையினரிடம் உயிருடன் பிடிபட்டான். இதனால் வழக்கை ஸ்ட்ராங் செய்ய முடிந்தது.
மும்பையில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்பதை உலகம் ஒப்புக்கொண்டது. அஜ்மல் கசாப் வாக்குமூலம் அதற்கு பேருதவி செய்தது. பாகிஸ்தானின் தொடர்பு குறித்து டேவிட் ஹெட்லியும் ஆதாரங்கள் அளித்தான்.
இந்தியாவில் நீதிமன்றத்தில் வழக்கு துரிதமாக நடைபெற்று தீர்ப்பு வெளியானது. ஆனால், பாகிஸ்தானோ அமைதியாக உள்ளது. விசாரணை இழுத்துக்கொண்டுள்ளது. இதைவிட கொடுமை, 4 நாட்கள் முன்பாகத்தான், மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சையதை பாகிஸ்தான் வீட்டு காவலில் இருந்து விடுவித்துள்ளது.
பாகிஸ்தான் இந்த விசாரணையை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்துகிறது. கடைசியாக கிடைத்த தகவல்படி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்ணால் பார்த்த சாட்சிகளை பாகிஸ்தான் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த நாடு இந்தியாவிடம் கேட்டுள்ளதாம்.
இதுவரை 9 விசாரரணை நீதிபதிகளை மாற்றியுள்ளது பாகிஸ்தானின் தள்ளிப்போடும் தந்திரத்திற்கு நல்ல உதாரணம். பாகிஸ்தானை சேர்ந்த 7 பேருக்கு மும்பை தாக்குதலில் தொடர்புள்ளதாக விசாரணை நடைபெறுகிறது. 25 சாட்சியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க அந்த நாடு கேட்டுக்கொண்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவனான லக்விக்கு ஜாமீன் கொடுத்த அந்த நாட்டு நீதிமன்றம், "வலுவற்ற வழக்கு, போதிய சாட்சியங்கள் இல்லை" என்றெல்லாம் காரணம் கூறியிருந்தது.