2ஜி ஊழல் வழக்கு: ஆ.ராசா, கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா? மே 30ல் தெரியும்!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுமீதான விசாரணை மே 30ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த தேவையான முகாந்திரம் உள்ளதாக கூறினார். எனவே இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரும் மே 26-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர்களுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
அதன்படி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் திங்கட்கிழமை தனிநீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் உடல் நலக்குறைவால் தயாளு அம்மள் இன்று சிபிஐ தனி கோட்டில் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் தயாளு அம்மாளை தவிர அனைவரும் ஆஜராயினர். தயாளு அம்மாள் ஆஜராக விலக்கு அளிக்க கோரி அவரது வழக்கறிஞர் கோர்ட்டில் மனு செய்தார். இதையடுத்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தாயளு அம்மாளை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமீன் மனுமீதும், தயாளு அம்மாளை வழக்கிலிருந்து விடுவிப்பது தொடர்பான மனுமீதான விசாரணை 28ம் தேதி ( இன்று) நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் 9 நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் ஆஜரானார்கள்.
அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆவணங்களை சரிபார்க்க கால அவகாசம் கோரப்பட்டது. அவகாசம் அளித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் ஜாமீன்மனுமீதான விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல தயாளு அம்மாளை வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் கோரிக்கை குறித்தும் அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.