ஜம்மு காஷ்மீரில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 2 ராணுவ வீரர்கள், 4 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த மோதல்களில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் லக்ஷ்கரே தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கலரூஸ் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற ராணுவத்தினர் தீவிரவாதிகளை சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அவர்களோ ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.
இதையடுத்து ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு பல மணிநேரம் நீடித்தது. இந்த மோதலில் லக்ஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் 4 ஏகே ரக துப்பாக்கிகள், சில தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் விமானம் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். பலியான ராணுவ வீரர் நாயக் நீரஜ் குமார் சிங் என்பது தெரிய வந்தது.
முன்னதாக கெரன் செக்டரில் ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் கிரெனேடியர் ராகுல் குமார் படுகாயம் அடைந்தார். குப்வாராவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.