400 மூத்த அதிகாரிகளை "வி.ஆர்" வீட்டுக்கு அனுப்பும் காக்னிசன்ட்!
டெல்லி: காக்னிசன்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் உயர் நிலைகளில் பணியாற்றும் 400 ஊழியர்களை "விருப்ப" ஓய்வு தந்து வீட்டுக்கு அனுப்புகிறது.
இதன் மூலம் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு வருடத்திற்கு 60 மில்லியன் டாலர் சம்பளம் மிச்சமாகுமாம். காக்கிசன்ட் சமீபத்தில் விருப்ப ஓய்வுத் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதை இந்த 400 பேரும் ஏற்றுக் கொண்டுள்ளனராம். இருப்பினும் இவர்களை கட்டாயப்படுத்தி அதை ஒப்புக் கொள்ள வைத்ததாக ஒரு சர்ச்சையும் உள்ளது.
கடந்த மே மாதம் முதல் இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது காக்னிசன்ட். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டது காக்னிசன்ட்.

9 மாத சம்பளம் கையில்
இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு கம்பெனியை விட்டு விலக முன்வருவோருக்கு அதிகபட்சம் 9 மாத சம்பளம் வரை கையில் கொடுக்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

உயர் அதிகாரிகளுக்குக் குறி
அதிக அளவில் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகளை குறைக்கும் நோக்கில்தான் இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது காக்னிசன்ட் நிறுவனம்.

இந்திய ஊழியர்கள் அதிகம்
அமெரிக்கா மற்றும் இந்தியாவில்தான் இந்த நிறுவனத்திற்கு ஊழியர்கள் அதிகம் பேர் உள்ளனர். இந்தியாவில் மட்டும் இந்த நிறுவனத்திற்கு 2.56 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

இந்தியர்கள் எத்தனை பேர்?
தற்போது விருப்ப ஓய்வுத் திட்டத்தில் இணைந்து வெளியேறும் 400 பேரில் கணிசமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை. வரும் நாட்களில் பணி விலகல் குறையும் என்றும் காக்னிசன்ட் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications