,உள்நாட்டு போர்: லிபியாவில் தவித்த 44 கேரள நர்ஸுகள் கொச்சி வந்தனர்
திருவனந்தபுரம்: லிபியாவில் சிக்கித் தவித்த கேரளாவைச் சேர்ந்த 44 நர்ஸுகள் இன்று கொச்சி வந்து சேர்ந்தனர்.
லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு லிபியா சிறப்பு படைக்கும், இஸ்லாமிய போராட்டக் குழுவுக்கும் இடையே தொடர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிபியாவில் சிக்கித் தவிக்கும் கேரளாவைச் சேர்ந்த நர்ஸுகளை நாட்டுக்கு அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக 44 நர்ஸுகள் துனிசியா எல்லை வழியாக வெளியேறி துபாய் சென்றனர்.
அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் இன்று காலை கொச்சி வந்தனர். மேலும் 43 கேரள நர்ஸுகள் துனிசிய எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஊர் திரும்பும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் இன்று மாலை 10 நர்ஸுகள் விமானம் மூலம் கேரளா வருகிறார்கள்.
லிபியாவில் வேலை பார்க்கும் கேரள நர்ஸுகள் பெங்காசியில் இருந்து மால்டாவுக்கு கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சாலை வழியாக செல்வது பாதுகாப்பு இல்லை என்பதால் தான் கடல் வழியாக நர்ஸுகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இந்நிலையில் லிபியாவில் சிக்கித் தவிக்கும் 600 கேரள நர்ஸுகளை இந்தியாவுக்கு அழைத்து வர இரண்டு சிறப்பு விமானங்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.