ட்விட்டரில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு- மேதியின் 5 'கூட்டாளிகள்' பெங்களூருவில் கைது?
பெங்களூர்: ட்விட்டர் மூலம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட மேதி பிஸ்வாஸின் நண்பர்கள் 5 பேரை பெங்களூரு போலீஸார் நேற்று கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூருவை சேர்ந்த மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற பொறியாளர் ஷமிவிட்னஸ் என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டார். அவரது ட்விட்டர் பக்கத்தை 17,700 பேர் பின்தொடர்ந்தனர். ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியிலும் மேதி ஈடுபட்டார் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 தொலைக் காட்சி கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு தனிப்படை போலீஸார் மேதியை சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். மேலும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய குற்றப்பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு போலீஸாரும் மேதியிடம் நேற்று விசாரணையை தொடங்கினர்.
கடந்த 2009-ம் ஆண்டில் தொடங்கப் பட்ட மேதியின் ஷமிவிட்னஸ் ட்விட்டர் பக்கத்தில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரம் ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலும், அரபியிலும் உள்ள ட்வீட்கள் அனைத்தையும் போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் மேதியின் ட்விட்டர் பக்கத்தை கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர்களும், கர்நாடகத்தில் மைசூரு, மங்களூரு பகுதியை சேர்ந்தவர்களும் அதிகளவில் பின் தொடர்ந்துள்ளனர். எனவே இவர்கள் அனைவரின் கணக்குகளையும் ட்விட்டர் வலைதள நிர்வாகத்தின் உதவியுடன் தேசிய புலனாய்வு பிரிவு போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
இதனிடையே மேதியின் ஷமிவிட்னஸ் ட்விட்டர் பக்கத்தை போலவே, ஷமி விட்னஸ்2 , ஷமிவிட்னஸ்_2 என்ற ட்விட்டர் பக்கங்களும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளன. இதில் ஷமி விட்னஸ்2 பக்கத்தை 717 பேரும், ஷமிவிட்னஸ்_2 பக்கத்தை 1,249 பேரும் பின் தொடர்ந்துள்ளனர். இந்த 3 பக்கத்திலும் இருந்த முக்கிய செயல்பாட்டாளர்களை போலீஸார் விசாரிக்க உள்ளனர்.
இது தொடர்பாக மைசூரை சேர்ந்த 2 பேர், மங்களூருவை சேர்ந்த 2 பேர், பெங்களூருவை சேர்ந்த ஒருவர் என 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்களூரில் ரகசிய இடத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.