இந்தியாவில் பிரசவத்தின் போது ஒரு மணி நேரத்தில் 5 பெண்கள் உயிரிழக்கிறார்கள்.. உலக சுகாதார அமைப்பு
டெல்லி: இந்தியாவில் பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து பெண்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம். ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும் என்பார்கள். ஆனால் பிரசவத்தின் போது அதிகப்படியான பெண்கள் உயிரிழப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் பெண்கள் பிரசவத்தின் போது மரணம் அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் ஏற்படும் பிரசவ மரணத்தில் 17 சதவீதம் ஆகும். இதற்கு முக்கிய காரணம் பிரசவத்தின் போது ஏற்படும் அதிக அளவிளான ரத்த கசிவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு லட்சம் பெண்களில் 174 பேர் மரணம் அடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் பெண்கள் பிரசவத்தின் போது மரணம் அடைகிறார்கள்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இந்தியாவிற்கான பிரதிநிதி கூறுகையில் " புள்ளி விபரங்கள்படி கிட்டத்தட்ட ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஐந்து பெண்கள் உயிரிழக்கிறார்கள். இது உலக பிரசவ மரணத்தில் 17 சதவீதமாகும்" என்று தெரிவித்தார்.