தாயை கொன்ற தந்தை.. போலீசில் சிக்கி விட்ட 5 வயது சிறுமி.. சாக்லேட், பொம்மையை வைத்து துப்பறிந்த போலீஸ்
பெங்களூர்: மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை 5 வயது மகள், போலீசில் மாட்டி விட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் அல்சூர் பகுதியின் மில்க்மேன் தெருவில் வசித்து வருபவர் ரவிராஜ் ஷெட்டி. இவர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள கார்கோவில் வேலை செய்து வந்தார். சுப்ரிதா (29) என்ற மனைவியும், 5 வயதில் ரீத்து என்ற மகளும் இருந்தனர்.
உடுப்பி மாவட்டம் குந்தாபூரை சேர்ந்த சுப்ரிதாவை 7 ஆண்டுகளுக்கு முன் ரவிராஜ் ஷெட்டி திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த வாரம், சுப்ரிதா கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அல்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
போலீசாருக்கு, ரவிராஜ் ஷெட்டி மீதுதான் சந்தேகம் எழுந்தது. ஆனால் அவரோ தனது மனைவி மன உளைச்சலில் இருந்ததாகவும், கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறினார். எனவே போலீசார் தக்க ஆதாரத்தை தேடி வந்தனர்.
அப்போதுதான், வீட்டில் எஞ்சியிருந்த 5 வயது மகள் ரீத்துவை விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால், ரீத்து அவரது பாட்டி வீட்டில் விடப்பட்டிருந்தார். சுப்ரிதா இறந்த விஷயத்தை சிறுமியிடம் யாரும் கூறவில்லை. எனவே போலீசார் நீக்குபோக்காக விசாரிக்க திட்டமிட்டு, ஒரு பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டரை இந்த பணிக்கு அமர்த்தினர்.
அந்த பெண் போலீஸ் தன்னை ஒரு உறவுக்கார பெண் போல காட்டிக்கொண்டு மஃப்டியில் ரீத்துவை அணுகினார். ரீத்துவுக்கு என்ன பிடிக்கும் என கேட்டுக்கொண்டார். தனக்கு பொம்மை, சாக்லேட்டுகள் பிடிக்கும் என ரீத்து கூறியதும், அவற்றை அந்த பெண் போலீஸ்காரர் வாங்கி கொடுத்து குழந்தையுடன் நெருக்கம் காட்டினார்.
இப்படியாக குழந்தை மனதில் இடம் பிடித்த பிறகு, சம்பவத்தன்று என்ன நடந்தது என நைசாக சிறுமியிடம் பேச்சு கொடுத்தார் அந்த பெண் போலீஸ்காரர். அப்போது சிறுமி கூறிய விஷயம்தான் வழக்கில் திருப்புமுனையானது. சம்பவத்தன்று தனது தந்தை, தனது தாயை தோளில் போட்டுக் கொண்டு கிச்சனை நோக்கி தூக்கி சென்றதாகவும், அவர் கிச்சனிலிருந்து மீண்டும் வெளியே வந்தபோது, தாய் கழுத்தில் ரத்தம் வடிந்து கொண்டிருந்ததாகவும் சிறுமி கூறினார்.
சிறுமி கூறியதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்ட அந்த பெண் போலீஸ், அதை அல்சூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரவிராஜ் ஷெட்டி முன்னிலையில் போட்டு காட்டினார். அதிர்ச்சியில் ரவிராஜ் ஷெட்டி முகம் வெளிறியது. வேறு வழியின்றி, சுப்ரிதாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதுவும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கொலை வழக்கில் 5 வயது சிறுமியின் சாட்சியமும், அதை போலீசார் பெற்ற விதமுமே திருப்புமுனையாக அமைந்துள்ளது.