திடீர் 'பரபரப்பு..' மின்னல் வேகத்தில் வந்த பேருந்து... சட்டென ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் பலி
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து நேற்று இரவு தலைநகர் ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
21 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த பேருந்து, கிழக்கு காரோ மற்றும் மேற்கு காசி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளது.
'ஷாக்..' மழைநீர் வடிகால் அமைக்கும் போதும் மண் சரிந்து விபத்து.. மே வங்க தொழிலாளி உயிரிழப்பு
பேருந்து விபத்து
நோங்ச்ராம் மேம்பாலத்தின் மீது அந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ரிங்டி ஆற்றில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்து காரணமாகப் பேருந்தில் இருந்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோங்ஜெங் மற்றும் வில்லியம் நகர்ப் பகுதி தீயணைப்புப் படையினர் மீட்புப்பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர்.
6 பேர் பலி
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 16 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். அவர்களில் படுகாயமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற இரு உடல்கள் பேருந்தில் சிக்கியுள்ளதாகவும் அதை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
எப்படி ஏற்பட்டது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து அதி வேகமாக வந்ததே விபத்து ஏற்படக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிவேகமாக வந்த பேருந்து திடீரென பாலத்தின் சுவரில் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக தேசமடைந்தது.
மீட்புப்படையினர்
மீட்புப் படையினர் சற்று தாமதமாகச் செயல்பட்டிருந்தால் கூட உயிரிழப்புகள் அதிகரித்திருக்க வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக வந்த பேருந்து ஆற்றில் பாய்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.