2 நாள் ஆச்சு... சுரங்கம் தோண்ட முடியல... ரோபோ உதவியை நாடிய அரசு...மீட்கப்படுவாரா 11 வயது சிறுவன்?
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி, 42 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிர் - ஷம்பா மாவட்டம் அருகே உள்ள உள்ள கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாகு. இவர் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் வீட்டின் பின்புறம் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். சிறுவனின் அழுகை சத்தத்தை கேட்ட குடும்பத்தினர், ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தீயணைப்புத்துறைக்கு தகவல்
இதையடுத்து சிறுவனை மீட்பதற்காக குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் போலீசாரும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். உடனடியாக கிணற்றுக்குள் விழுந்த சிறுவனுக்கு, ட்யூப் மூலமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூஸ், உணவு உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வாளியின் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

மீட்புப் பணியில் குழுவினர்
இது ஒருபுறம் இருக்க, சிறுவனை மீட்க பக்கத்திலேயே பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்கியது. இதற்காக ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு குழிகளை தோண்டும் பணிகள் தொடங்கியது. அதோடு ட்ரில்லர் இயந்திரங்களில் கொண்டு வரப்பட்டு பணிகள் தொய்வின்றி நடைபெற்றன. ஆனால் அப்பகுதியில் அதிகளவில் கற்கள் இருப்பதால், கற்களை உடைக்கும் இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக பள்ளம் தோண்டும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதுவரை 50 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாளியால் தண்ணீரை அனுப்பும் சிறுவன்
இதனிடையே சிறுவன் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் அதிகமாக சேரத் தொடங்கியது. இதனை உணவு பொருட்களை அனுப்பும் வாளி மூலமாக அந்த சிறுவன் வெளியேற்றி வருகிறார். அந்தக் காட்சிகள் வெளியாகி குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், 42 மணி நேரம் கடந்தும் சிறுவன் உயிருடன் இருப்பதற்கு, அவரின் மன உறுதி முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

ரோபோ உதவியை நாடிய அரசு
இந்தநிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த மீட்பு ரோபோ வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த ரோபோ குழுவினர் மூலம், சிறுவனை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவனை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை நிச்சயம் உயிருடன் மீட்க விரைந்து செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications