கட்டாய ஆதார் கார்டுக்கு அரசியல் சாசனத்தில் இடம் இருக்கிறதா ? - சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை
ஆதார் கார்டு சட்டத்திற்கு அரசியல் சாசனத்தில் இடம் உள்ளதா என்பது பற்றி உச்சநீதிமன்றம் நாளை விசாரணை செய்கிறது
டெல்லி : ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் உள்ளதா என்கிற மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.
தனி நபர் அடையாளத்திற்காக மத்திய அரசால் ஆதார் திட்டம் 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் தனிநபர் விபரங்கள் சேகரிக்கப்படுவதற்கான ஒரு அடையாள எண்ணாகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
அப்போது எதிர்கட்சியான பா.ஜ.க இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸை அடுத்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் ஆகியவற்றைப் பெறவும், வங்கி கணக்கு, மொபைல் போன் எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சலுகைகளைப் பெற ஆதார் அவசியம்
தற்போது அரசின் எல்லாவித செயல்பாட்டிற்கும் ஆதார் எண் அவசியமாகிவிட்டது. அதனால் ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டயமாக்கியது. இணைப்பிற்கு மார்ச் 31 வரை கால அவகாசமும் வழங்கி உள்ளது. இதை எதிர்த்து பலரும் குரல் கொடுத்துவருகிறார்கள்.
ஆதாரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
கர்நாடகாவைச் சேர்ந்த மேத்யூ தாமஸ் என்கிற நபர், ஆதார் கார்டு மூலம் அரசு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்றும், பயோ மெட்ரிக் மூலம் பதியப்படும் தகவல்கள் திருடப்படுவதற்குமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியும், அரசின் கட்டாய சட்டத்திற்கு அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். கடந்த 30ம் தேதி ஆதார் தொடர்பான வேறு ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தின அரசியல் சாசன அமர்வு நவம்பர் மாத இறுதி வாரத்தில் விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.
அரசியல் சாசனத்தில் ஆதாருக்கு இடம் உள்ளதா ?
இந்நிலையில், மேத்யூ தாமஸ் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி செல்லமேஸ்வரர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி செல்லமேஸ்வர், ஆதார் தொடர்பாக ஏற்கனவே நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அனைத்து வழக்குகளும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்
சமீபத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கி இருக்கும் உரிமை என்றும், அதில் அரசு எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், ஆதார் என்பது அரசின் சலுகைகளை எளிதில் பெற வகை செய்யும் ஒரு வசதி தான் என்றும், அதை இணைக்க அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாளை ஆதார் வழக்கு விசாரணை
ஒரு சில மனுதாரர்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கச் சொல்லுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அரசியல் சாசன விதிகளிலேயே இல்லாத ஒரு சட்டம் என்றும் தங்கள் வழக்கில் தெரிவித்து இருக்கிறார்கள். இது சம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிமன்றம் வங்கி கணக்குகள், மொபைல் எண்களை ஆதாரோடு இணைக்கச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் , ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.