20 மாநிலங்களில் களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சி: கலக்கத்தில் காங்., பாஜக
லக்னோ: ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 20 மாநிலங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. சோனியா, ராகுல், முலாயம் சிங்கை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளே மக்களின் கவனத்தை பெற்றுவந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி வரவு தேசிய அரசியல் நிலைமையையே புரட்டிபோட்டுவிட்டது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி மற்றும் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படும் ராகுல் காந்திக்கும் இடையேதான் தலைமை பதவிக்கு போட்டி இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்று, ஆட்சியையும் பிடித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.தற்போது அதே உற்சாகத்துடன் நாடாளுமன்ற தேர்தலிலும் களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது.
20 மாநிலங்களில்
ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசும் போது வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 20 மாநிலங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது. நாட்டின் முக்கிய தலைவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவோம்.
சோனியா, ராகுலுக்கு எதிராக
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, ஆகியோரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை விரைவில் முடிவு செய்வோம்.
உ.பி.யில் அதிரடி
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ்க்கு எதிராகவும் களமிறங்குவோம். அங்குள்ள 80 நாடாளுமன்றத் தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டியிடும்.
பிப்ரவரி 15ல் இறுதி
வருகிற பிப்ரவரி மாதம் 15-ந்தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிடும்.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து வருகிற 15-ந்தேதி விண்ணப்பங்கள் பெறப்படும். ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட விரும்புபவரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 100 பேர் முன்மொழிய வேண்டும் என்றார் சஞ்சய் சிங்.
அமேதி தொகுதியில்
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் போட்டியிட முடிவு செய்துள்ளார். பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் ஏற்கனவே அவர் அமேதி தொகுதியில் முகாமிட்டு மக்களை சந்தித்து வருகிறார்
பாஜக, காங்கிரஸ் கலக்கம்
ஆம் ஆத்மி கட்சி 20 மாநிலங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளதோடு, முக்கிய தலைவர்களை எதிர்த்தும் வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளதால், காங்கிரஸ், பா..ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.
ராகுல்காந்தி ஒப்புதல்
அதிலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியே, ஆம் ஆத்மி கட்சயில் சாமான்ய மக்களின் ஆர்வமான பங்கேற்புதான், அக்கட்சசியின் வெற்றிக்கு காரணம் என்றும், இதிலிருந்து மற்ற கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மக்களின் குரல்
மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ், ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகள் மக்களின் குரலை மதிக்காவிட்டால் அவர்கள் வரலாற்றில்மட்டுமே இடம்பெறும் நிலை ஏற்பட்டுவிடும் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் வருகை மற்ற கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.