என் தொகுதியில் ரோடு சூப்பரா இருக்கு..விபத்துக்கு காரணமே இதுதான்..ம.பி பாஜக எம்எல்ஏ சொல்றதை கேளுங்க
சிம்லா: சாலைகள் தரமாக இருப்பதால்தான் விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் என்று மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ நாராயண் பட்டேல் கூறியிருக்கிறார். சாலைகள் நன்றாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. அப்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடக்கின்றன என்று கூறியுள்ளார்.
நமது நாட்டில் மக்கள் தொகை ஒரு பக்கம் பெருகி வருகிறது என்றால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்து வருவது வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல விபத்துக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதிக விபத்துக்கள்..நாட்டிலேயே சென்னைதான் பர்ஸ்ட்..வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு அறிக்கை
சாலை விபத்துக்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துக்கள் நடைபெற்றதாகவும் இந்த விபத்துக்களால் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேரும் உயிரிழந்து இருப்பதாக கடந்த மாதம் மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருந்தது. அது மட்டும் இன்றி 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் விபத்துக்களில் காயம் அடைந்து இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
விபத்துக்கு காரணமே இது தான்
வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை கட்டமைப்புகள் ஏற்படுத்தாது மற்றும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிகளை மீறி செல்வது என பல்வேறு காரணங்கள் விபத்துக்கு பிரதான காரணமாக உள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ நாராயண் படேல், சாலை விபத்துக்களுக்கு, சாலைகள் தரமாக இருப்பதே காரணம் என சொல்லி புருவத்தை உயர்த்த வைத்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ நாராயண் படேல்
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தின் மன்த்ஹடா தொகுதி உறுப்பினரான நாரயண் படேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "தற்போது சாலைகள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக என் தொகுதியில் சாலைகள் நன்றாக இருப்பதால் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. சாலைகள் நன்றாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. அப்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடக்கின்றன. இந்த அனுபவம் எனக்கும் உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
குண்டும் குழியுமான சாலைகளில்..
மேலும், பெரும்பாலான ஓட்டுநர்கள் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்கு அதிக காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார். குண்டும் குழியுமான சாலைகளினால் தான் அதிகம் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபட்டுக் கொள்ளும் நிகழ்வுகளும் நடப்பதாக வாகன ஓட்டிகள் பெரிதும் ஆதங்கப்படுகின்றனர். ஆனால், மத்திய பிரதேச எம்.எல்.ஏ நாராயண் படேல்.. நல்ல சாலைகள் இருப்பதால்தான் வாகன விபத்து அதிகம் நடப்பதாக கூறியிருப்பதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சிப்பதை பார்க்க முடிகிறது.