வெளியே விட்டால் சாட்சியை கலைத்துவிடுவார்.. திலீப் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க அங்கமாலி நீதிமன்றம் மறுத்துள்ளது.
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க அங்கமாலி நீதிமன்றம் மறுத்துள்ளது. திலீப்பை வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகை கடந்த பிப்ரவரி மாதம் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் மலையாள சூப்பர் ஸ்டாரான திலீப்புக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததையடுத்து அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
கைதான கையோடு ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அதேநேரத்தில் ஆலுவா போலீசார் காவலில் எடுத்து அனுமதி கோரினர். இதையடுத்து ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.
இதையடுத்து நேற்று மீண்டும் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்பின் போலீஸ் கஸ்டடி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. போலீஸ் கஸ்டடி இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து இன்று மாலை மீண்டும் அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும் திலீப்பை வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திலீப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளியே சென்றால் செல்வாக்கை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க கூடும் என்பதால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.