லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கு தேர்தல்.. சட்ட ஆணைய கூட்டத்தில் அதிமுக எதிர்ப்பு!
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை தற்போது வேண்டாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை என்பது தேவையில்லை, வேண்டுமானால் 2024-இல் நடத்திக் கொள்ளட்டும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க 4,000 கோடியும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் அதிகமான பணமும் செலவிடகிறது. அதை மிச்சப்படுத்த லோக்சபா மற்றும் சட்டசபை ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தேசிய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
டெல்லியில் நாளையும் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்று அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி.க்கள் மைத்ரேயன், வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஒரே தேசம், ஒரை தேர்தல் நடைமுறையை நடத்தினால் சட்டசபையின் ஆயுட்காலம் குறைந்துவிடும். 2024ல் வேண்டுமானால் ஒருங்கிணைந்த தேர்தலை நடத்தட்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டுகாலம் எங்களுக்கு அவகாசம் தேவைப்படுகிறது என்றார் தம்பிதுரை.