வாரணாசியில் 6 முனைப்போட்டி .. நரேந்திர மோடிக்கு சாதகம்?
லக்னோ: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் 6 முனைப் போட்டி உருவாகியிருப்பதால் அவருக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வாரணாசி தொகுதியில் 2009ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி போட்டியிட்டார். அவர் தம்மை எதிர்த்து நின்ற பகுஜன் சமாஜ் வேட்பாளர் முக்தார் அன்சாரியைவிட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஹிந்துக்களின் ஆதரவு அதிகம் இருப்பதால் நரேந்திர மோடியை வாரணாசியில் களம் இறக்குகிறது. ஆனால் வாரணாசியில் தற்போதைய நிலையில் 6 முனைப்போட்டி உருவாகியுள்ளது.
வாரணாசியில் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதேபோல் சமாஜ்வாடியின் மிர்சாபூர் எம்எல்ஏவும் மாநில அமைச்சருமான கைலாஷ் சவ்ராசியாவும் களமிறக்கப்பட்டுள்ளார்.
பகுஜன்சமாஜ் கட்சி விஜய் ஜெயஸ்வாலை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் விரைவில் வேட்பாளரை அறிவிக்க உள்ளது. கடந்த முறை முரளிமனோகர் ஜோஷியை எதிர்த்து போட்டியிட்ட முக்தார் அன்சாரி இம்முறை குவாமி ஏக்தா தள் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இப்படி வாரணாசி தேர்தல் களமானது 6 முனைப் போட்டியை எதிர்கொண்டுள்ளது. இதனால் மதச்சார்பற்ற வாக்குள் அனைத்துமே 5 கட்சிகளுக்கும் சிதறிப் போகும் நிலை உருவாகி உள்ளது. ஹிந்துத்துவா சிந்தனை வேரோடியிருப்போரின் வாக்குகள் அனைத்துமே மோடிக்கு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நரேந்திர மோடியின் வெற்றியை உறுதி செய்யும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.