40 ஆண்டுக்கு பின் ரயில்வே தொழிற்சங்களின் மிரட்டும் ஸ்டிரைக்! நெருக்கடியில் மத்திய அரசு
டெல்லி: 40 ஆண்டுக்குப் பின்னர் ரயில்வே தொழிற்சங்கங்களில் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் இந்திய ரயில்வே தேசியக் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இந்திய ரயில்வே கூட்டமைப்பு ஆகியவை முக்கிய தொழிற்சங்கங்கள். இந்த தொழிற்சங்கங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருபவை புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் அவுட்சோர்சிங் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றுக்கான அனுமதி நீக்கம் போன்றவைதான்.
இவற்றை நிறைவேற்றக் கோரி ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டத்தை மார்ச் மாதம் நடத்துவது என இந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
வேலை நிறுத்த வாக்கெடுப்பு
இவற்றின் பொதுக் குழுக் கூட்டங்கள் வரும் 12ந் தேதி மற்றும் 17-ந் தேதி நடைபெற உள்ளன. முன்னதாக இந்த தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்து ஊழியர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
96% பேர் ஆதரவு
இந்த வாக்கெடுப்பில் 96% பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பு மீது இறுதி முடிவு எடுத்து போராட்டத்தை அறிவிக்க வேண்டிய நிலையில் தொழிற்சங்கங்களின் பொதுக்குழு கூடுகிறது.
40 ஆண்டுகளுக்குப் பின்னர்..
இதனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ரயில்வே துறையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழிற்சங்க தலைவராக முன்னின்று 1974ஆம் ஆண்டு ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்.
அந்த 20 நாட்கள்... ஒடுக்கிய இந்திரா
சுமார் 20 நாட்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நீடித்ததால் மத்திய அரசுக்கும் மிகப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அப்போராட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒடுக்கினார். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர்.
கலங்கும் மத்திய அரசு
தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. தேர்தலும் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் அப்படி ஒரு மிகப் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் கையிலெடுப்பதால் கதிகலங்கி இருக்கிறது மத்திய அரசு.
நாளொன்றுக்கு ரூ800கோடி இழப்பு?
இந்திய ரயில்வேயில் 13 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஒரு நாளில் 2.2 கோடி மக்கள் பயணம் செய்யும் இந்திய ரயில்வேத்துறை 20 லட்சம் டன் சரக்குகளையும் ஏற்றிச் செல்கின்றது. இதனால் ஒரு நாள் வேலை இழப்பு என்பதே 800 கோடி அளவில் நட்டத்தை ஏற்படுத்தும் என்பதால் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு தொழிற்சங்கங்கள் தயாராக இருக்கின்றன. மத்திய அரசும் ஓரிரு நாளில் இறுதி முடிவை அறிவிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.