நீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி.. துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக, தனியார் துப்பறியும் அமைப்புகளை அந்த வங்கி நாடியுள்ளது.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக, தனியார் துப்பறியும் அமைப்புகளை அந்த வங்கி நாடியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் பணியாற்ற விரும்பும் துப்பறியும் அமைப்புகளின் விண்ணப்பங்களை கேட்டு இருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இது அந்த வங்கிக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது அந்த வங்கி, லோன்களை கொடுக்காமல் இருக்கும் நபர்களை பிடிக்க புதிய முறையை கையாள இருக்கிறது. முதல்கட்டமாக, லோன் வாங்கி அதை பல நாட்களாக அடைக்காமல் இருக்கும் நபர்களின் பெயர்களை பத்திரிக்கைகளில் வெளியிட முடிவு செய்துள்ளது. அதாவது அவர்களின் பெயர்களை பொதுவில் வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்த போவதாக அந்த வங்கி கூறியுள்ளது.
இரண்டாவது கட்டமாக, இப்படி கடனை திரும்ப கொடுக்காமல் சுற்றும் நபர்களை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் அமைப்புகளை அந்த வங்கி நாடியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் பணியாற்ற விரும்பும் துப்பறியும் அமைப்புகளின் விண்ணப்பங்களை கேட்டு இருக்கிறது. இவர்கள் வசம் குற்றவாளிகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
மே 5ம் தேதி வரை அந்த வங்கி இந்த விண்ணப்பங்களை பெறும். அதில் இருந்து ஒரு துப்பறியும் அமைப்பை தேர்வு செய்து இந்தியா முழுக்க அந்த வங்கியில் கடன் வாங்கி கொடுக்காமல் இருப்பவர்களை கண்டுபிடிக்க வைக்க போகிறார்கள். இதற்காக ஒரு வருடம் ஒப்பந்தம் போடப்பட உள்ளது.