ஜிதின் பிரசாதாவை தொடர்ந்து.. முஷ்டி உயர்த்தும் சச்சின் பைலட்.. கவிழப் போகிறது ராஜஸ்தான் காங். அரசு?
ஜெய்ப்பூர்: உத்தரப்பிரதேச மூத்த காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவுக்கு தாவிய நிலையில் ராஜஸ்தானில் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் அணி மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளது காங்கிரஸ் மேலிடத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக வலம் வந்தவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், ஜிதின் பிரசாதா. இவர்களில் ஜோதிராதித்யா சிந்தியாவும் ஜிதின் பிரசாதாவும் இப்போது பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர்.
கடந்த ஆண்டு ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் ஐக்கியமான போது ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லி ஹோட்டலில் முகாமிட்டார் சச்சின் பைலட்.
வேக்சின்.. மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட வேண்டும்.. ராஜஸ்தான் கோரிக்கை.. வழக்கு தொடுக்க முடிவு
சச்சின் பைலட் அணி மீண்டும் அதிருப்தி
இதனால் அசோக் கெலாட் அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. பின்னர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தலையிட்டு சச்சின் பைலட் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று அசோக் கெலாட் அரசுக்கு மீண்டும் சச்சின் பைலட் மற்றும் அவரது எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்தனர். ஆனால் 10 மாதங்களுக்கு மேலாகியும் சச்சின் பைலட் தரப்பு முன்வைத்த பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்கிற ஆதங்கம் இருந்து வருகிறது.
காங். மேலிடம் கனத்த மவுனம்
சச்சின் பைலட் தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் மேலிடம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவில் இடம்பெற்றிருந்த அகம்து படேல், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுநாள் வரையில் அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட சச்சின் பைலட் அணியின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற டெல்லி மேலிடமும் முன்வரவும் இல்லை.
பாஜகவில் ஜிதின் பிரசாதா
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சச்சின் பைலட்டின் சகாவான ஜிதின் பிரசாதா பாஜகவில் நேற்று இணைந்தார். இதனால் இப்போது அனைவரது பார்வையும் சச்சின் பைலட் பக்கம் திரும்பி இருக்கிறது.
காங். தலைவர்கள் பைலட்டுக்கு ஆதரவு
சச்சின் பைலட் தரப்பு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பினால் அதில் எந்த ஒரு தவறுமே இல்லை என மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜிதேந்திர சிங்கின் இது தொடர்பன வீடியோ காங்கிரஸ் வட்டாரங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
கவிழப் போகிறதா ராஜஸ்தான் அரசு?
இதனால் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எந்த நேரத்திலும் சச்சின் பைலட் அணியால் ஆபத்து ஏற்படும் என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான ஒரு தலைவர் இல்லாத காரணத்தாலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் பல இளம்தலைவர்கள் பாஜகவுக்கு தாவிக் கொண்டே இருக்கின்றனர் என்பது காங்கிரஸ் கட்சியினரின் வேதனை.