மாட்டிறைச்சி விவகாரம்: கொல்லப்பட்ட உ.பி. முதியவர் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல்
லக்னோ: மாட்டிறைச்சியை வீட்டில் சமைத்து சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியால் அடித்துக் கொல்லப்பட்ட உத்தரப்பிரதேச முதியவர் குடும்பத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறியை வீட்டில் சமைத்து சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியால் இக்லாக் என்பவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது மகன் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தால் பெரும் வன்முறை வெடித்தது.
Congress VP Rahul Gandhi meeting villagers in Bisada, Dadri pic.twitter.com/rzeSWUcecu
— INC India (@INCIndia) October 3, 2015
இந்த நிலையில் இக்லாக்கின் குடும்பத்தினரை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதன்படி, நேற்று இக்லாக் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போராடி இக்லாக் குடும்பத்தினரைச் சந்தித்தார் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவாலைத் தொடர்ந்து அடுத்த சிலமணி நேரங்களில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, இக்லாக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல், மக்களுக்கு இடையே துவேஷம் அதிகரிப்பது நாட்டை பலவீனமாக்கி விடும், அனைவரும் ஒற்றுமையாக இருந்து அவதூறுகளுக்கு எதிராக போராட வேண்டும்' என கருத்துத் தெரிவித்துள்ளார்.
அகிலேஷைச் சந்தித்தனர்:
இந்நிலையில், இன்று இக்லாக் குடும்பத்தினர் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்தனர்.
இன்னமும் இக்லாக் படுகொலை தொடர்பாக குற்றவாளிகள் அனைவரும் செய்யப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இக்லாக்கை படுகொலை செய்த 9 பேரில் இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.