பேபி பஜார் நடத்தி பெண் குழந்தைகளை விற்ற தெலுங்கானா ‘சொர்ணாக்கா’ கைது!
நல்கொண்டா: தெலுங்கானாவில் பெண் குழந்தைகளை விற்கும் தாதாவாக செயல்பட்டு வந்த காம்லி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக மாறிய தெலுங்கானாவில் பின்தங்கிய பகுதியாக நல்கொண்டாவில் பெண் குழந்தைகள் அரசு மையம் ஒன்றில் சந்தை நடத்தி வெளிப்படையாக விற்கப் படுவதை ஆதாரத்துடன் தனியார் தொலைக்காட்சி ஒன்று அம்பலப் படுத்தியது.
வறுமை காரணமாக பெற்றோரே பெண் குழந்தைகளை விற்பதும், இதற்கு இடைத் தரகர்கள் பலர் உதவியாக இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது. ரூ. 5 ஆயிரம் முதல் பெண் குழந்தைகள் விற்கப் படுவதும், சட்டத்திற்குப் புறம்பாக ஆவணங்களை மறைத்து இந்த வியாபாரத்தில் பலர் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த செய்தியைத் தொடர்ந்து, 6 பேர் மீது தெலுங்கானா போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்தக் குழந்தைகள் விற்பனைச் சந்தையின் முக்கிய நபரான காம்லி என்ற பெண் தாதாவையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.
கடந்த 15 மாதங்களுக்கு முன் அப்பெண்ணால் விற்கப்பட்ட 15 மாத பெண் குழந்தையையும் போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக அக்குழந்தையின் தந்தை மற்றும் வளர்ப்பு தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய சமூகத்தில் பெரும்பாலான பெற்றோர்களை மகன்களை விட மகள்களே முதுமைக் காலத்தில் பராமரிக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல், தெலுங்கானா பெற்றோர் பெண் குழந்தைகளை விற்பது மிகுந்த கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.