ராவணன் பொம்மையை எரிக்காத காங்கிரஸ்.. மத்திய பாஜக அரசுக்கு நூதன முறையில் எதிர்ப்பு.. ஏன் தெரியுமா?
காந்தி நகர்: குஜராத்தில் தசரா தினத்தில் ராவணன் உருவபொம்மையை எரிக்காமல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமலாக்கத்துறை, சிபிஐ, பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் உருவபொம்மை செய்து எரித்தனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தசரா பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென் இந்தியாவை பொறுத்தமட்டில் கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனை பிரசித்தி பெற்றது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசையில் நடக்கும் தசரா விழா புகழ் பெற்றது. இதேபோல் வடஇந்திய மாநிலங்களிலும் தசார பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தசரா கொண்டாட்டம்
வடஇந்தியாவில் தசரா தினத்தில் ராவணன் உருவபொம்மையை எரித்து கொண்டாடுவர். ராமன், லட்சுமணன், சீதையை வழிபடும் இவர்கள் ராவணன் உருவபொம்மையை எரித்து தசரா கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்காக அதிக உயரத்தில் ராவணன் பொம்மையை பொதுவெளியில் வைத்து எரிப்பர். இதன்மூலம் தீமை விலகி நன்மை கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
இந்த நடைமுறை தான் குஜராத் மாநிலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தசரா தினத்தில் நேற்று குஜராத்தின் பூஜ் நகரில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது மத்திய அரசு அமலாக்கத்துறை, சிபிஐயை தவறாக பயன்படுத்துகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை எனக்கூறி அவர்கள் இரவில் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உருவபொம்மை எரிப்பு
மேலும் அவர்கள் ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கு பதில் அமலாக்கத்துறை, சிபிஐ, பணவீக்கம், சிலிண்டர் விலை உயர்வை குறிக்கும் வகையில் எழுதி உருவாக்கிய உருவபொம்மையை எரித்தனர். தேசப்பிதா காந்தியின் சிலை முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியின் நூதன முறையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

முன்பு நடந்தது என்ன?
இந்தியாவில் எதிர்க்கட்சியினரை முடக்க மத்திய அரசு அமலாக்கத்துறை, சிபிஐ-யை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்த வகையில் தான் நேஷனல் ெஹரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல் இந்தியாவில் பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதாக தொடர்ந்து எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த போராட்டம் நடந்தது.

இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முயன்று வருகிறது. அதேபோல் ஆம்ஆத்மி கட்சியும் குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றி திட்டமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications