ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்- முன் ஜாமீன் கோரி மனு
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். முன்ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏர்செல் நிறுவன பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க சிவசங்கரனை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கட்டாயப்படுத்தியதாகவும், அதன் மூலம், சன் குழுமம் ஆதாயம் அடைந்ததாகவும் 2ஜி வழக்கில் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராகவும், சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செளத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட் ஹோல்டிங், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
சிபிஐ குற்றச்சாட்டு
ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
ஆஜராக சம்மன்
இவ்வழக்கில், தயாநிதி, கலாநிதி மற்றும் இதர 6 பேர் வரும் மார்ச் 2ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, கடந்த அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பினார்.
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்
இதையடுத்து, மாறன் சகோதரர்கள் இருவரும் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இவர்களுடன் சன்டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாகி சுவாமிநாதன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அமலாக்கத்துறை விளக்கம்
ஆனால் மேக்சிஸ் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன், சிஇஓ ரால்ப் மார்ஷல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இரண்டு பேரும் மலேசியாவில் இருப்பதால் சம்மன் அனுப்ப இயலவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
முன்ஜாமீன் மனு
இதனிடையே, முன்ஜாமீன் கோரி மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்ஜாமீன் கிடைக்குமா?
சிபிஐ நீதிமன்றத்தில் வரும் 16ஆம் தேதி முன் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முறைகேடாக பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு கொடுத்த வழக்கு தயாநிதிமாறன், கலாநிதிமாறனுக்கு நெருக்கடியை கொடுத்து வரும் நிலையில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கும் மாறன் சகோதரர்களை நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.