41 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு துரோகம்.. சரத்பவாரை விடாமல் துரத்தி அடித்த சோகம்.. நடந்தது என்ன?
மும்பை: 41 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவார் செய்த துரோகத்தை நினைவூட்டும் விதமாக அஜித்பவாரின் செயல்பாடுகள் தற்போது உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் அஜித்பவார், என்சிபி தலைவரும் தனது சொந்த சித்தப்பாவுமான சரத்பவாருக்கு துரோகம் செய்து புதிய ஆட்சியை அமைய வைத்தார். தானும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன் சரத்பவார் விதைத்தது தற்போது மரமாக வளர்ந்துள்ளது என பரபரப்பாக பேசப்படுகிறது.
போனை எடுக்கவில்லை.. நெருங்கிய நண்பரை தூது அனுப்பிய சரத்.. அஜித்திற்கு மொத்த குடும்பமும் எதிர்ப்பு!
சட்டசபை தேர்தல்
கடந்த 1978-ஆம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சியானது, இந்திரா காங்கிரஸ், காங்கிரஸ் (எஸ்) என இரண்டாக பிரிந்தது. சரத்பவார், காங்கிரஸ் எஸ் பிரிவில் இருந்தார். அச்சமயம் பிப்ரவரியில் மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடந்தது.
பெரும்பான்மை
இதில் காங்கிரஸ் (எஸ்), இந்திரா காங்கிரஸ் மற்றும் ஜனதா கட்சிகள் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் (எஸ்) 69 இடங்களிலும் இந்திரா காங்கிரஸ் 65 இடங்களிலும் ஜனதா கட்சிகள் 99 இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போதைய 2019 மகாராஷ்டிரா நிலவரத்தை போல் அப்போதும் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவியது.
அதிகார போட்டி
இதையடுத்து காங்கிரஸின் இரண்டு பிரிவுகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி அரசு அமைத்தன. அப்போது இரு காங்கிரஸ் பிரிவுகளும் இடையே கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக இருந்த போது நடந்தது போல் அதிகார போட்டி நிலவியது. அச்சமயம்தான் சரத்பவார் சமயோஜிதமாக யோசித்தார்.
மகாராஷ்டிரா அரசு
உடனே ஜனதா கட்சி தலைவர் சந்திரசேகருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். பின்னர் எம்எல்ஏக்களை இழுக்க குதிரை பேரத்தில் சரத்பவார் ஈடுபட்டார். அதையடுத்து 38 எம்எல்ஏக்களும் காங்கிரஸில் இருந்து வெளியேறினர். இதையடுத்து மகாராஷ்டிரா அரசு கவிழ்ந்தது.
சரத்பவார் தேர்வு
பின்னர் அந்த 38 உறுப்பினர்கள், ஜனதா கட்சி மற்றும் விவசாய தொழிலாளர்கள் கட்சி உள்ளிட்ட உதிரி கட்சிகளுடன் இணைந்து வானவில் கூட்டணியை உருவாக்கினார். இதையடுத்து மகாராஷ்டிரத்தில் இளம்வயது முதல் முதல்வராக சரத்பவார் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 38.
அஜித் பவார்
காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவார் 1978 இல் செய்த துரோகம் தற்போது 41 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் பவார் மூலம் அவருக்கே திரும்பியதாக பார்க்கப்படுகிறது. அன்று நீ விதைத்த விதை இன்று ஆலமரமாக நிற்கிறது என்பதை போல் உள்ளது மகாராஷ்டிராவில் கதை.